"பசுவுக்கு மட்டும் தனித்துவமாக எதுவுமில்லை"- நிகிலா விமல் கருத்துக்கு மாலா பார்வதி ஆதரவு!

கேரள திரையுலக நடிகையான நிகிலா விமல், தமிழில் ‘வெற்றிவேல்’, ‘கிடாரி’, கடந்த வாரம் வெளியான ‘ரங்கா’ போன்ற படங்களில் நடித்தவர். இவர் நடித்து சமீபத்தில் வெளியான மலையாளப் படம் ‘ஜோ அன்ட் ஜோ’. படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிற நிலையில் நெட்டிசன்கள் சிலரால் நிகிலா விமர்சிக்கப்பட்டு வருகிறார். அதற்கு காரணம் அவர் நடித்த படம் கிடையாது. படத்தின் ப்ரோமோஷனுக்காக தனியார் யூ-டியூப் சேனல் ஒன்றுக்கு நிகிலா அளித்த பேட்டிதான் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

அந்தப் பேட்டியில், “பசுவைக் கொல்வது கூடாது எனச் சொல்கிற சிஸ்டம் எப்போதும் நம்மிடையே இருந்தது கிடையாது. ஜீவகாருண்யம் என்றால் எந்த விலங்கையும் கொல்லக் கூடாது. பசுவுக்கு மட்டும் தனித்துவமாக எதுவுமில்லை. சாப்பிட கூடாதுன்னா எதையும் சாப்பிடக் கூடாது. நம்ம ஊர்ல அந்த விலங்கை வெட்டலாம், ஆனால் பசுவை வெட்டக்கூடாதுன்னு சொல்ற ஒரு வழக்கமே இல்லை” எனப் பேசியது சர்ச்சையானது. அவருக்கு எதிராகச் சிலர் கருத்திட்டு வந்தாலும் நிகிலாவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பிரபல குணச்சித்திர நடிகையான மாலா பார்வதி, நிகிலாவுக்கு தன்னுடைய ஆதரவை பதிவிட்டு இருக்கிறார். அதில், “நிகிலா கேட்கப்பட்ட கேள்விக்குத் தெளிவாகப் பதில் அளித்திருக்கிறார். எல்லா உயிர்களும் ஒன்றுதான். கொல்லக் கூடாது என்றால் எல்லாவற்றிற்கும் அது பொருந்தும். நிகிலா இது குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. கேரளா முற்போக்கான சமூகம். சிலர் அவரை குறி வைத்தாலும் அதனை விட அதிகமாக அவர் பக்கம் மக்கள் நிற்பார்கள்” எனப் பகிர்ந்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.