பருத்தி, நூல் விலையை குறைக்க உடனடியாக நடவடிக்கை தேவை: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: பருத்தி, நூல் விலை உயர்வு காரணமாக தமிழகத்தில் ஜவுளித் தொழில் எதிர்கொள்ளும் கடுமையான பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு பருத்தி, நூல் விலை உயர்வைக் குறைக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் ஜவுளித் தொழில் எதிர்கொள்ளும் கடுமையான இடையூறுகள் குறித்து தங்களின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். கடந்த சில மாதங்களாக இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய ஜவுளி, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ்கோயல் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு சென்றேன். பருத்திக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரியை மத்திய அரசு திரும்பப் பெறுவதாக அறிவித்தது.

இருந்தபோதிலும் நிலைமை சீரடையாத காரணத்தால் விலை தொடர்ந்து உயர்கிறது. அதிக எண்ணிக்கையிலான நூற்பு, நெசவு மற்றும் ஆடை அலகுகள், அவற்றின் செயல்பாட்டு மூலதனத்தின் நீடித்த தேவைகள் மற்றும் உற்பத்திச் செலவுக்கு ஏற்ப வாங்குபவருக்கு வழங்குவதற்கான ஒப்புக்கொள்ளப்பட்ட விலைக்கு இடையே விலை பொருந்தாததால் மூடப்படும் அபாயத்தை எதிர்கொள்கின்றன.

அதனால் ஆடை உற்பத்தியாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இது வேலை இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கூட்டுறவுத் துறையில் உள்ள கைத்தறி நெசவாளர்களால் நூலை கொள்முதல் செய்ய முடியாததால், துணி நெசவு செய்வதற்கும் தங்கள் உறுப்பினர்களுக்கு வழங்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, விலைவாசி உயர்வையும், அதன் விளைவாக ஏற்படும் இடையூறுகளையும் கட்டுப்படுத்திட பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

இருப்பு அறிவிப்பு

உடனடி நடவடிக்கையாக பருத்தி மற்றும் நூலுக்கான இருப்பு தொடர்பான அறிவிப்பை அனைத்து நூற்பாலைகளுக்கும் கட்டாயமாக்கப்படலாம். இதன்மூலம் உண்மையான தரவுகளைப் பெற முடியும்.

மத்திய அரசு பருத்தி மீதான இறக்குமதி வரியை வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை தள்ளுபடி செய்துள்ளது. இருப்பினும் ஒப்பந்தம் போடப்பட்ட பிறகு சரக்குகள் இந்தியத் துறைமுகங்களை வந்தடைய 3 மாதங்களுக்கு மேல் ஆகும் என்பதால், வரும் செப்டம்பர் வரை உள்ள அனைத்து ஒப்பந்தங்களுக்கும் இறக்குமதி வரிவிலக்கு கிடைக்கும் என்று மத்திய அரசு தெளிவான விளக்கங்களையும் வழங்கலாம்.

தற்போது நூற்பாலைகளுக்கு பருத்தி வாங்குவதற்காக ரொக்கக் கடன் வரம்பை 3 மாதங்களுக்கு மட்டுமே வங்கிகள் வழங்குகின்றன. இந்த நிலைமையைக் கருத்தில் கொண்டு பருத்தி கொள்முதல் செய்வதற்கான நூற்பாலைகளின் ரொக்கக் கடன் வரம்பை ஓராண்டில் 8 மாதங்கள் வரை நீட்டிக்கப்படலாம். இதுபோல வங்கிகள் வாங்கும் மதிப்பில் 25 சதவீதமாக உள்ள விளிம்புத் தொகையை 10 சதவீதமாகக் குறைக்கலாம். ஏனெனில் வங்கிகள் வாங்கும் பங்கு மதிப்பை சந்தையில் உண்மையான கொள்முதல், சந்தை விகிதங்களைவிட குறைவான விலைகளில் கணக்கிடுகின்றன. இந்த இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த விஷயத்தில் தாங்கள் உடனடியாகத் தலையிட வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.