அறுவை சிகிச்சை செய்து கொண்ட நடிகை உயிரிழந்த விவகாரம்; உரிய அனுமதியின்றி கிளினிக் செயல்பட்டதாக தகவல்

பெங்களூரு,
கன்னட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் பிரபல நடிகை சேத்தனா ராஜ். 21 வயதான இவர், பெங்களூருவின் ராஜாஜி நகரில் இயங்கி வரும் ஒரு தனியார் காஸ்மெட்டிக் கிளினிக்கில், கொழுப்பை குறைப்பதற்கான அறுவை சிகிச்சையை செய்து கொள்வதற்காக கடந்த 16 ஆம் தேதி சேர்ந்துள்ளார்.
அங்கு அவருக்கு ‘லிப்போசஜ்ஷன்’ (Liposuction) எனப்படும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சேத்தனா ராஜின் உடல் சிகிச்சைக்கு ஒத்துழைக்காத்தால், அவரது நுரையீரலில் நீர் தேங்கத் தொடங்கியுள்ளது.
இதையடுத்து சேத்தனா ராஜை வேறொரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து சேத்தனாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து போலீசார் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சேத்தனாவிற்கு அறுவை சிகிச்சை செய்த கிளினிக் நிர்வாகம், அதற்கான உரிய அனுமதியை பெறவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து அதிகாரிகளுடன் பெங்களூரு கலெக்டர் ஆலோசனை நடத்தியதாகவும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பெங்களூரு மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.