ஆபாச வழக்கில் சிக்கிய ஆயாவுடன் ஜெயில் சினேகம்.. ஜேப்படி ஜெயாவுக்கு ஆப்பு..!

மதுரையில் ஆபாச பட வழக்கில் சிக்கி சிறையில் கம்பி எண்ணிவரும் ஆசிரியையுடன் நட்பு ஏற்படுத்திக் கொண்ட ஜேப்படி பெண் ஒருவர், ஜாமீன் எடுக்க உதவுவது போல நடித்து ஆசிரியையின் உறவினர் வீட்டிற்குள் புகுந்து நகை, பணம், லேப்டாப்பை அபேஸ் செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

மதுரை பெத்தானியாபுரம் பகுதியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை ராதிகா இவர் கடந்த 2 மாதத்திற்கு முன்னர் ஆபாச பட வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

அதே சிறையில் சிவகாசியை அடுத்த பள்ளப்பட்டி இந்திரா நகரை சேர்ந்த ஜேப்படி பெண் ஜெயா என்பவர் திருட்டு வழக்கில் கைதாகி இதே சிறையில் இருக்கும் நிலையில் இரு கேடிகளும் நட்பாக பழகி உள்ளனர்.

ஆசிரியை ராதிகாவிடம் தான் சீக்கிரம் வெளியே போய் விடுவேன் உன்னை எப்படியும் ஜாமினில் எடுக்க நான் உதவி செய்கிறேன் என அடிக்கடி ஜெயா ஆறுதல் கூறி உள்ளார்

இதை நம்பிய ஆசிரியை ராதிகா தனது வீட்டு முகவரி மற்றும் உறவினரின் போன் நம்பர் என அனைத்தையும் ஜெயாவிடம் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த வாரம் ஜெயிலில் இருந்து வெளியே வந்த ஜெயா, பெத்தானியாபுரம் பகுதியிலுள்ள ஆசிரியை ராதிகா வீட்டிற்கும், உறவினர் வீட்டிற்கும் சென்று சிறையில் நாங்கள் இருவரும் ஒன்றாக நல்ல நட்புடன் பழகி உள்ளோம். அவரை எப்படியும் ஜாமீனில் எடுக்க நான் உதவி செய்கிறேன் நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்றும், கூறியுள்ளார்.

ஜெயா கூறியதை ராதிகாவின் உறவினர்கள் நம்பி, கேடி ஜெயாவை வீட்டினுள் அழைத்து சென்று உபசரித்து அனுப்பியுள்ளனர். இரு தினங்கள் கழித்து மீண்டும் ஜெயா, ராதிகாவின் உறவினர் வீட்டிற்கு சென்று பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது.

அப்போது ராதிகாவின் உறவினர், வீட்டை பார்த்துக் கொள்ளுங்கள் அருகே உள்ள கடைக்கு போய் விட்டு வருகிறேன் என்று கூறிச் சென்றுள்ளார்.

அவர் திரும்பி வருவதற்கு முன்பு நைசாக பீரோவில் இருந்த மூன்றரை சவரன் தங்க சங்கிலி, மோதிரம், லேப்டாப் , பணம் உள்ளிட்டவற்றை திருடிக்கொண்டு ஜேப்படி ஜெயா தலைமறைவாகி விட்டார்.

இதுகுறித்து கரிமேடு போலீசில் ராதிகாவின் உறவினர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு சிவகாசியில் தலைமறைவாக இருந்த ஜெயாவை கைது செய்து அவள் திருடிச் சென்றவற்றையும் பறிமுதல் செய்தனர்.

ராதிகா உறவினரின் வீடுபுகுந்து கைவரிசை காட்டிய ஜெயாவை மீண்டும் மதுரை மத்திய சிறைக்கே போலீசார் அனுப்பி வைத்தனர்.

ஏற்கனவே மாணவர்களுடனான வில்லங்க சிந்தனையால் ராதிகா ஆபாச படவழக்கில் சிக்கி கம்பி எண்ணிவரும் நிலையில், ஜெயாவுடனான ஜெயில் சினேகத்தால் ராதிகாவின் உறவினர் வீட்டில் கொள்ளை போயிருப்பது குறிப்பிடதக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.