ஐபிஎல் கிரிக்கெட்- கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி திரில் வெற்றி

மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நவி மும்பை டி.ஒய் பாட்டில் மைதானத்தில் நடைபெற்ற 66-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக களம் இறங்கிய கேப்டன் கே எல் ராகுல் – குயின்டன் டி காக் ஜோடி ஆரம்பம் முதலே எதிரணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தது..
இந்த சீசனில் இதுவரை இல்லாத அளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி, கொல்கத்தா பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது.  டி காக் 59 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். 
சௌதீ வீசிய 19-வது ஓவரில் ராகுல் – டி காக் ஜோடி 4 சிக்சர்கள் அடித்தார். ரசல் வீசிய ஓவரில் டி காக் தொடர்ச்சியாக 4 பவுண்டரிகள் அடித்தார்.  இறுதியில் லக்னோ அணி விக்கெட் இழப்பின்றி 210 ரன்கள் குவித்தது. 
டி காக் 70 பந்துகளில் 140 ரன்களும், ராகுல் 51 பந்துகளில் 68 ரன்கள் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 
இதையடுத்து 211 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய  கொல்கத்தா அணியில், தொடக்க வீரர் வெங்கடேஷ் அய்யர் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார். மற்றொரு வீரர் தோமர் 4 ரன்னுடன்
வெளியேறினார். 
நிதிஷ் சர்மா 42 ரன்களும் கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் 50 ரன்களும் குவித்தனர். சாம் பில்லிங்ஸ் 36 ரன்கள் அடித்தார். ரிங்கு சிங் 40 ரன்கள் அடித்தார். சுனில் நரேன் 21 ரன் அடித்த நிலையில் களத்தில் இருந்தார். 
20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் அடித்தது. இதனால் 2 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி திரில் வெற்றி பெற்றது. 
அந்த அணி சார்பில் அதிகபட்சமாக மொஹ்சின் கான், மார்கஸ் ஸ்டோனிஸ் தலா  3 விக்கெட்களை கைப்பற்றினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.