பேரறிவாளன் வாழ்க்கைக்கு மத்திய- மாநில அரசுகள் உதவ வேண்டும்: பழ. நெடுமாறன்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 31 ஆண்டுகள் சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் வரவேற்றுள்ளார்.

இதுகுறித்து  தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பழ.நெடுமாறன், உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை வரவேற்று பாராட்டுகிறேன். இத்தீர்ப்பின் மூலம் இதே வழக்கில் 31 ஆண்டுகாலமாக சிறையில் இருக்கக்கூடிய மற்ற ஆறு பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக முதல்வர் மேற்கொள்வார் என நம்புகிறேன்.

இதுமட்டும் இல்லாமல், பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக சிறையில் உள்ளவர்களையும், இஸ்லாமிய சகோதரர்களையும் விடுதலை செய்ய வேண்டும என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.

ஆளுநர் செய்தது சட்டத்திற்கு புறம்பான செயல். தமிழக அமைச்சரவை இந்த 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என ஆளுநருக்கு பரிந்துரை செய்த நிலையில் கையெழுத்துப் போட வேண்டிய நிலையில் அதை மீறி அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதற்கு அரசியல் சட்டத்தில் இடமில்லை. தவறு திருத்தப்பட வேண்டும்.

ஏற்கெனவே அமைச்சரவையில் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என பரிந்துரை செய்ததன் காரணமாக அப்பரிந்துரையை மதித்து இந்த அறு பேரையும் விடுதலை செய்ய வேண்டும்.

இவ்வழக்கு பொய்யாக ஜோடிக்கப்பட்ட வழக்கு என்பது இந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு மூலம் உண்மையாகி இருக்கிறது. காலம் கடந்தேனும் நீதி வெல்லும் என்பது இத்தீர்ப்பின் மூலம் வெளிவந்துள்ளது.

எந்தவொரு தொடர்பும் இல்லாமல் 31 ஆண்டுகள் சிறையில் இருந்த  பேரறிவாளனுக்கு மத்திய அரசும், மாநில அரசும் அவரது வாழ்க்கைக்கு உதவ முன் வரவேண்டும். இது அரசின் மனிதாபிமான கடமையாகும் என்று பழ நெடுமாறன் கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.