பாலியல் தொழிலாளர்களுக்கும் ஆதார் அட்டை வழங்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி:  கொரோனோ பரவலின்போது, உச்ச நீதிமன்றத்தில் கடந்தாண்டு பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘கொரோனோ ஊரடங்கால் பாலியல் தொழில் முற்றிலும் முடங்கி விட்டதால் வருமானம் இன்றி அதுசார்ந்த தொழிலாளர்கள் உணவுக்கு கூட வழியில்லாமல் அன்றாட வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். அதனால், இவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையிலான உத்தரவை பிறப்பிக்க வேண்டும்,’ என குறிப்பிடப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், இவர்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்களை வழங்கும்படி அரசுக்கு உத்தரவிட்டது.    இந்நிலையில், நீதிபதி எல். நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் அமர்வில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘தொழிலை வைத்து யாரையும் பிரித்து பார்க்க முடியாது.  பாலியல் தொழில் செய்தாலும் அவர்களும் மரியாதையுடன் வாழ்வதற்கு உரிமை உள்ளது. அவர்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது. கொரோனா பாதிப்பின் போது இந்தியாவில் 9 லட்சம் பாலியல் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன் அடிப்படையில், பதிவு செய்யப்பட்ட பாலியல் தொழிலாளர்கள், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்க வேண்டும். அவர்களிடம் இருப்பிட சான்றிதழ் குறித்து கேட்க கூடாது. தேசிய எய்ட்ஸ் நோய் கட்டுப்பாடு நிறுவனத்தில் அவர்கள் வகைப்படுத்தப்பட்டு இருந்தாலே, ஆதார் அட்டையை வழங்கலாம்,’ என கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.