பேரறிவாளனை விடுவிக்க அதிமுக அரசின் வரலாற்று நடவடிக்கையை மறைக்க முடியாது: ஓபிஎஸ்

பேரறிவாளனை விடுவிக்க அதிமுக அரசு எடுத்த வரலாற்று நடவடிக்கையை யாராலும் மறைத்துவிட முடியாது என அதிமுக ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்

பசுமை வழிச் சாலையில் உள்ள பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் அவரை, பேரறிவாளன் அவரது தாய் அற்புதம்மாள் உடன் சந்தித்து நன்றியை தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ. பன்னீர்செல்வம் பேரறிவாளனை விடுவிக்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என தெரிவித்தார். ஒரு மாநில முதலமைச்சருக்கு இருக்கும் உரிமை என்ன என்பதை பேரறிவாளன் விவகாரத்தில் சட்டமன்றத்தில் நிரூபித்து தீர்மானம் நிறைவேற்றியவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என பன்னீர்செல்வம் குறிப்பிட்டார். பேரறிவாளனை விடுவிக்க அதிமுக அரசு எடுத்த சட்ட நடவடிக்கைகளின் வரலாற்றை திமுக அரசால் ஒருபோதும் மறைத்துவிட முடியாது எனவும் ஓ பன்னீர்செல்வம் கூறினார்
image

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்திற்கு விலக்கு கேட்டு இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பபட்டது என்ற ஓ. பன்னீர்செல்வம், அதற்கு முழு காரணம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாதான் என்றும் விளக்கமளித்தார்.

ஜெயலலிதாவின்  தியாகத்தையும், உணர்வையும் அனைவரும் அறிவர். வரலாறை யாராலும் மறக்க முடியாது, ஆரம்ப காலங்களில் இருந்து பல்வேறு கட்டங்களில் யார் யார் என்னென்ன தீர்மானம் எடுத்தார்கள் என்பதெல்லாம் ஒரு வரலாற்று உண்மை, இதனை பிரித்து கூறுவது தவறானது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.