விராட் கோலி, மேக்ஸ்வெல் அதிரடி – குஜராத்தை வீழ்த்தி பிளே ஆப் வாய்ப்பை தக்கவைத்தது பெங்களூரு

மும்பை:
மும்பை வான்கடே மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுக்கு 168 ரன்கள் சேர்த்தது. ஹர்திக் பாண்டியா 62 ரன்னும், டேவிட் மில்லர் 34 ரன்னும், விரித்திமான் சஹா 31 ரன்னும் எடுத்தனர்.
பெங்களூரு சார்பில் ஹேசிவுட் 2 விக்கெட், மேக்ஸ்வெல், ஹசாரங்கா தலா ஒரு விக்கெட்டு வீழ்த்தினர்.
இதையடுத்து, 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான விராட் கோலி, டூ பிளசிஸ் இருவரும் அதிரடியாக ஆடினர். பொறுப்புடன் ஆடிய விராட் கோலி அரை சதமடித்தார்.
அணியின் எண்ணிக்கை 115 ஆக இருந்தபோது டூ பிளசிஸ் 44 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து 73 ரன்னில் விராட் கோலி ஆட்டமிழந்தார்.
அடுத்து இறங்கிய மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடி 18 பந்தில் 40 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். 
இறுதியில், பெங்களூரு அணி 18.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 170 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் பிளே ஆப் சுற்றை தக்க வைத்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.