ஆர்.கண்ணன் இயக்கத்தில் சிவனாக நடிக்கும் யோகிபாபு

யோகிபாபு தற்போது பிஸியான நகைச்சுவை நடிகராக நடித்து கொண்டிருந்தாலும் அவருக்கு பிடித்தமான சில நல்ல கதைகளும் கதாபாத்திரமும் வரும்போது கதையின் நாயகனாகவும் நடிக்க தயங்குவதில்லை. தர்மபிரபு, கூர்க்கா, மண்டேலா என அவர் கதையின் நாயகனாக நடித்த படங்கள் அனைத்துமே டீசன்டான வெற்றியை பெற்றுள்ளன.

இந்த நிலையில் அடுத்ததாக இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கவுள்ள பெரியாண்டவர் என்கிற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் யோகிபாபு. டைட்டிலுக்கு ஏற்றபடி இந்த படத்தில் சிவபெருமான் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம் யோகிபாபு. டைம் டிராவலை மையப்படுத்தி உருவாகவுள்ள இந்த படத்தின் கதை 1960 மற்றும் இப்போது என இரண்டு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளதாம்.

ஏற்கனவே ஆர்.கண்ணன் இயக்கத்தில் மிர்ச்சி சிவாவுடன் யோகிபாபு இணைந்து நடித்துள்ள காசேதான் கடவுளடா திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றபோதே பெரியாண்டவர் படத்தின் கதையை யோகிபாபுவிடம் கூறினாராம் ஆர்.கண்ணன் அப்போது பெரிதாக ரியாக்சன் காட்டாத யோகிபாபு, காசேதான் கடவுளடா டப்பிங் நடந்த சமயத்தில் அந்த படத்தின் அவுட்புட்டை பார்த்துவிட்டு உடனடியாக பெரியாண்டவர் படத்தில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்து விட்டாராம்.

அந்தவகையில் ஏற்கனவே எமதர்மன் கதாபாத்திரத்தில் நடித்த யோகிபாபு தற்போது சிவபெருமானாகவும் நடிக்கிறார் என்பது ஆச்சர்ய ஒற்றுமை. தற்போது ஹன்சிகா நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் ஆர்.கண்ணன். இதை முடித்து விட்டு அடுத்ததாக யோகி பாபு நடிக்கும் படத்தை இயக்குவார் என்று தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.