எல்லாரும் சமம்னா யார் ராஜா? உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி விமர்சனம்

Tamil Cinema Nenjikku Neethi Review : கனா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் நெஞ்சுக்கு நீதி.

வெளிநாட்டில் படித்துவிட்டு இந்தியா திரும்பும் ஐபிஎஸ் அதிகாரி விஜயராகவன் (உதயநிதி ஸ்டாலின்) பொள்ளாச்சிக்கு பணி மாற்றம் செய்யப்பட்டுகிறார். அங்கு பொள்ளாச்சிக்கு அருகே சுந்தரபாளையம் என்ற கிராமத்தில் ஜாதி ஏற்றத்தாழ்வுகள் உச்சத்தில் இருக்கிறது. பட்டியல் இனத்தை சேர்ந்த பெண் பள்ளியில் சமைத்த சாப்பாட்டை கூட தனது பிள்ளைகள் சாப்பிட கூடாது என்று சொல்லும் அளவுக்கு ஜாதி பெரிய களையாக வளர்ந்துள்ளது.

இதனிடையே அப்பகுதியில் திடீரென இரண்டு இளம் பெண்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகின்றனர். இந்த கொலை வழக்கை கையில் எடுக்கும் ஏஎஸ்பி விஜயாகவன் உண்மையை கண்டறிந்தாரா? இந்த வழக்கில் அவருக்கு வரும் ஜாதி அழுத்தங்களை எப்படி சமாளித்தார்? இளம் பெண்கள் கொல்லப்பட காரணம் என்பதை பரபரப்பாக சொல்லும் கதைதான் நெஞ்சுக்கு நீதி.

கடந்த 2019-ம் ஆண்டு இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான ஆர்டிக்கள் 15 படத்தின் ரீமேக்காக இந்த படம் தயாராகியுள்ளது. இந்தியில் ஜாதிய வன்கொடுமையை எதிர்த்து வெளியான இந்த படத்தை தமிழில் அந்த கதைக்கு சற்றும் சமரசம் செயயாமல் அப்படியே ரீமெக் செய்த படக்குழுவுக்கு பாராட்டுக்கள்.

காவல்துறை ஏஎஸ்பி விஜயராகவனாக உதயநிதி ஸ்டாலின் எவ்வித அலட்டலும் இல்லாமல் கதையின் தன்மையை உணர்ந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். உண்மையை கண்டறிய எந்த எல்லைக்கும் செல்ல வேண்டும் என்று அவர் எடுக்கும் முயற்சிககள் பாராட்டத்தக்கது. அதேபோல் அவர் கூடவே இருந்து வில்லத்தனம் செய்யும் கேரக்டரில் சுரேஷ் சக்ரவர்த்தி கச்சிதமாக பொருந்தியுள்ளார்.

ஷிவானிராஜ் சேகர், இளவரசு, மயில்சாமி, ரமேஷ் திலக், ராட்சசன் சரவணன், ஆகியோர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி கதைக்கு வலு சேர்த்துள்ளனர். பிக்பாஸ் ஆரியின் நடிப்பு கதையின் உயிரோட்டத்திற்கு உதவியுள்ளது. ரீமேக் படமாக இருந்தாலும் எவ்வித சமரசமும் இல்லாமல் ஜாதிய வன்கொடுமைகளை தெளியாக காட்டிய இயக்குநர் அருண்ராஜா காமராஜக்கு பாராட்டுக்கள். அது மட்டுமல்லாமல’, திருப்பூரில் சத்துணவு சமைத்த பட்டியல் இன பெண் புறக்கணிப்பு, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை, தலைவர்கள் சிலைக்கு கவசம் என பல உண்மை சம்பவங்களை சேர்த்துள்ளார்.

இன்றைய அரசியல் தொடர்பான காட்சிகள், சாதிய ரீதியான குறியீடுகள், மற்றும் வசனங்கள் எல்லோரும் சமம் அப்படினா யார் ராஜா என்று கேட்டுகும் கேள்விகள் சரியான இடத்தில் பொருந்தியுள்ளது. அதேபோல் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் மருத்துவராக வரும் ஒருவருக்கு அனிதா என்று பெயர் வைத்தது என சமூகத்திற்கு பல குறியீடுகளை வைத்துள்ளார்.

இந்த படத்தின் ஒரிஜினல் வெர்ஷன் ஆர்ட்டிககள் 15 படத்தில் ஆதிக்க ஜாதியில் இருந்து வரும் நாயகன் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்து அவர்களை ஜாதிய வன்கொடுமையில் இருந்து மீட்டெடுப்பவராக வருவார். இது அப்போதே சற்று விமர்சனங்களை எதிர்கொண்ட நிலையில் தற்போது தமிழிலும் இதே நிலை தொடர்கிறது. இதில் விஜயராகவன் என்ன ஜாதி என்று சொல்லவில்லை என்றாலும் கூட அவரது பெயரை வைத்து அவர் ஆதிக்க ஜாதியை சேர்நதவர் என்ற பிம்பத்தை கொடுக்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.