'கடைசி வரை வழக்கறிஞராக இருப்பேன்!' – நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் ஆசை!

“மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் வாழ்நாள் முழுதும் வழக்கறிஞராக பணிபுரிவேன்” என, பிரிவு உபசார விழாவில், உச்ச நீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் உருக்கமாகப் பேசினார்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த எல்.நாகேஸ்வர ராவ், பார் கவுன்சிலில் இருந்து உச்ச நீதிமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 7வது நபர் ஆவார். இவர், உச்ச நீதிமன்ற நீதிபதியாக, கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் தேதி பொறுப்பேற்றார். இவர், பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கி உள்ளார்.

அதில் முக்கியமானதாகப் பார்க்கப்படும் வழக்கு
பேரறிவாளன் வழக்கு
. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில், 30 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த தன்னை விடுவிக்கக் கோரி, பேரறிவாளன் தாக்கல் செய்த வழக்கில், இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 142வது சட்டப் பிரிவை பயன்படுத்தி, உச்ச நீதிமன்றத்தின் தனித்துவமான அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவரை விடுதலை செய்து தீர்ப்பளித்தது, எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு.

இந்நிலையில், வரும் ஜூன் மாதம் 7 ஆம் தேதியுடன் உச்ச நீதிமன்ற
நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் ஓய்வு
பெற உள்ளார். நாளை முதல் உச்ச நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ள நிலையில், இன்று, அவருக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் நடைபெற்ற விழாவில், மூத்த நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பலர் பங்கேற்று, எல்.நாகேஸ்வர ராவுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

இந்த விழாவில் பேசிய நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ், “நான், உச்ச நீீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட போது, நீதிபதி கோகோயிடம், நான் இன்னும் ஒரு வழக்கறிஞராகவே உணர்கிறேன் என்று தெரிவித்தேன். அதற்கு அவர், அப்படி நீங்கள் நினைப்பது, மற்ற வழக்கறிஞர்களை நன்றாகப் புரிந்து கொள்ள உதவும் என்று கூறினார். நேற்று கூட, நான் இதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். இப்போதும் இந்தப் பக்கம் (பெஞ்ச்) விட அந்தப் பக்கம் (பார்) சிறந்தது என்று நினைக்கிறேன். ஒரு வாய்ப்பு கிடைத்தால் என் வாழ்நாள் முழுவதும் நான் வழக்கறிஞராக இருப்பேன்” என, உருக்கமாகப் பேசினார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசுகையில், “தானும், நீதிபதி நாகேஸ்வர ராவும், ஒரே இடமான விஜயவாடா பார் அசோசியேஷனில் இருந்து வழக்கறிஞர் தொழிலை தொடங்கியதாகக் குறிப்பிட்டார். மேலும், “எல்.நாகேஸ்வர ராவ், முதல் தலைமுறை வழக்கறிஞர். அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் நல்வாழ்த்துக்கள். இது மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நாள். நாங்கள் ஒன்றாக வாழ்க்கையைத் தொடங்கினோம். சில காலத்திற்குப் பிறகு நானும் ஓய்வு பெற்று விடுவேன். அவர் வலிமையானவர்” என, தலைமை நீதிபதி ரமணா தெரிவித்தார்.

இந்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், ஒரு மனிதனாக நான் நீதிபதி எல்.நாகேஸ்வர ராவிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்” என கூறினார். இந்தியாவிற்கான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் கூறுகையில், “நீதிமன்றம் மிகவும் நல்ல மற்றும் சக்திவாய்ந்த நீதிபதியை இழக்கிறது என்றும், பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பு, இவர் வழங்கிய தீர்ப்புகளில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று” என கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.