கர்நாடக பாட புத்தகத்தில் இருந்து தந்தை பெரியார் வரலாறு நீக்கம்: சித்தராமையா கண்டனம்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடபுத்தகத்தில் இருந்த தந்தை பெரியார், நாராயணகுரு உள்ளிட்ட சமூக போராளிகளின் வரலாறுகள் நீக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் பாஜ அரசு அமைந்த பின் பாட புத்தகங்களில் மாற்றம் செய்யும் நோக்கத்தில் ரோஹித் சக்ரதீர்த்தா தலைமையில் பாடபுத்தகம் மறுசீரமைப்பு குழு அமைத்தது. அவர் தலைமையிலான குழுவினர் தயாரித்துள்ள ஒன்று தொடங்கி பத்தாம் வகுப்பிலான பாட புத்தகத்தில் திப்புசுல்தான் குறித்த வரலாறுகள் இருட்டடிப்பு செய்யப்பட்டது. அவர் மட்டுமில்லாமல், பகத்சிங் உள்ளிட்ட சில சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறுகள் நீக்கப்பட்டதுடன் மாநிலத்தை ஆட்சி செய்த சில மன்னர்களின் வரலாறுகள் இணைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் வரலாற்று பிரிவின் 5வது பாகத்தில் சமூகம், சீர்த்திருத்தம், ஆன்மிகம் உள்ளிட்ட சேவையில் ஈடுப்பட்டுள்ளவர்கள் குறித்து இடம் பெற்றிருந்தது. பிரம்ம சமாஜம், ஆர்ய சமாஜம், சத்ய சோதனை சமாஜம், ராமகிருஷ்ண மிஷன், நாராயணகுரு தர்ம பரிபாலன யோகம், வங்காள புரட்சி, பிரார்த்தனை சமூகத்தின் மாற்றங்கள், அலிகாட் போராட்டம், தியாசபிக்கல் புரட்சி, சமூக சீர்த்திருத்தவாதி தந்தை பெரியார் ஆகிய பாடங்கள் இடம் பெற்றிருந்தது. இதில் நாராயணகுரு, தந்தை பெரியார் ஆகியோர் வரலாறுகள் நீக்கப்பட்டதுடன் 11 பக்கங்களில் இருந்த மேற்கண்ட வரலாற்றை 6 பக்கங்களாக சுருக்கி உள்ளனர்.பத்தாம் வகுப்பு பாட புத்தககத்தில் நாராயணகுரு, தந்தை பெரியார் வரலாறுகள் நீக்கப்பட்டுள்ளதற்கு சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளதுடன், தற்போது மாற்றம் செய்துள்ள பாட புத்தகங்களை செயல்படுத்தாமல் நிறுத்தி வைத்து, கல்வி நிபுணர்கள், வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், சிந்தனையாளர்கள் கொண்ட குழு அமைத்து பாட திட்டம் உருவாக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.