குஜராத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி

மும்பை,

ஐ.பி.எல் கிரிக்கெட்டின் 67-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ள பெங்களூரு அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் விளையாடியது. மறுமுனையில், அறிமுக அணியாக குஜராத் டைட்டன்ஸ் அடுத்த சுற்றுக்கு ஏற்கனவே முன்னேறிவிட்டது.

இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்டிக் பாண்ட்யா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. குஜராத் அணியின் கேப்டன் ஹர்டிக் பாண்ட்யா அதிகபட்சமாக 62 ரன்கள் எடுத்தார்.

இதனையடுத்து, 169 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் கேப்டன் டூபிளசிஸ் களமிறங்கினர். இரு வீரர்களும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பொறுப்பாக ஆடிய கேப்டன் டூபிளசிஸ் 38 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதிரடியாக ஆடிய விராட் கோலி 54 பந்துகளில் 73 ரன்கள் குவித்து வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய மெக்ஸ்வெல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 18 பந்துகளை சந்தித்த மேக்ஸ்வெல் 5 பவுண்டர்கள் 2 சிக்சர்களுடன் 40 ரன்கள் குவித்தார்.

இறுதியில், 18.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்த பெங்களூரு 170 ரன்கள் குவித்தது. இதன் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பெங்களூரு அணி தக்கவைத்துக்கொண்டுள்ளது.


Related Tags :

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.