ஜெ. முதல் பேரறிவாளன் வரை.. யார் இந்த நாகேஸ்வர ராவ்? – சுவாரசிய தகவல்கள்!

விரைவில் ஓய்வு பெற உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ், பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கியதோடு மட்டுமல்லாமல், பல முக்கிய வழக்குகளில் வழக்கறிஞராகவும் திறம்பட வாதாடி உள்ளார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி
லாவு நாகேஸ்வர ராவ்
, 64, ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பெடாநந்திபாடு பகுதியைச் சேர்ந்தவர். குண்டூரில் உள்ள லயோலா பப்ளிக் பள்ளி, குண்டூர் ஜேகேசி கல்லூரி மற்றும் குண்டூரில் உள்ள டிஜேபிஎஸ் கல்லூரியில் இவர் கல்வி பயின்றார்.

எல்.நாகேஸ்வர ராவ், பார் கவுன்சிலில் இருந்து உச்ச நீதிமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 7வது நபர் ஆவார். இவர், உச்ச நீதிமன்ற நீதிபதியாக, கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் தேதி பொறுப்பேற்றார். உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்பு, ஆந்திர பிரதேச மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தார். மேலும் இவர், 2000 ஆம் ஆண்டு மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். நாட்டில் அதிக சம்பளம் வாங்கும் வழக்கறிஞர்களில் எல்.நாகேஸ்வர ராவும் ஒருவர்.

சொத்துக் குவிப்பு வழக்கில், தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவுக்காக கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி, அவருக்காக திறம்பட வாதாடி, அவரை விடுதலை செய்து அசத்தினார். உச்ச நீதிமன்றத்தில் அவர் கடைசியாக வாதாடிய வழக்குகளில் ஒன்று நீட் வழக்கு. அதில் அவர் தமிழக அரசு மற்றும் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரிக்காக ஆஜரானார். இந்தியாவின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக மூன்று முறை எல்.நாகேஸ்வர ராவ் பணியாற்றி உள்ளார்.

உச்ச நீதிமன்ற நீதிபதியாக கடந்த 2016 ஆண்டு மே மாதம் முதல் பணியாற்றி வரும் நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ், பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கி உள்ளார். அதில் முக்கியமானதாகப் பார்க்கப்படும் வழக்கு
பேரறிவாளன் வழக்கு
. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில், 30 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த தன்னை விடுவிக்கக் கோரி, பேரறிவாளன் தாக்கல் செய்த வழக்கில், இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 142வது சட்டப் பிரிவை பயன்படுத்தி, உச்ச நீதிமன்றத்தின் தனித்துவமான அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவரை விடுதலை செய்து தீர்ப்பளித்தது, எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு.

இந்நிலையில், வரும் ஜூன் மாதம் 7 ஆம் தேதியுடன் உச்ச நீதிமன்ற
நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் ஓய்வு
பெறுகிறார். நாளை முதல் உச்ச நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ள நிலையில், இன்று, அவருக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் நடைபெற்ற விழாவில், மூத்த நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பலர் பங்கேற்று, எல்.நாகேஸ்வர ராவுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.