தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தாமதமாகிறது

சென்னை:

தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. 1 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளி இறுதி தேர்வு முடிந்து 14ந் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.

மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் அரசு, உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 13ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி, ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள், பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் காரணமாக பள்ளிகளை ஜூன் மாத இறுதியில் திறக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

இது தவிர அரசு பள்ளிகளில் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் முதற்கட்டமாக ஒரு சில மாவட்டங்களில் அமலுக்கு வர உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டி இருப்பதாலும் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பள்ளிகள் திறக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து இருந்த நிலையில் ஜூன் 4வது வாரத்தில் பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.