நகை சீட்டு, முதலீட்டில் அதிக வட்டி தருவதாக கூறி மோசடி: நகைக்கடையில் காவல்துறை தீவிர சோதனை

சேலத்தில் நகை சீட்டு, நகை முதலீடு மோசடி வழக்கில் தொடர்புடைய லலிதாம்பிகை ஜுவல்லர்ஸ் நகைக் கடையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள நகைக்கடை உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை தேடி வருகின்றனர்.
சேலம் சின்னகடை வீதி ராஜகணபதி கோவில் அருகே தங்கராஜ் மற்றும் அவரது மனைவி லலிதா ஆகியோருக்கு சொந்தமான லலிதாம்பிகை ஜுவல்லர்ஸ் இயங்கி வந்தது. இவர்கள் தங்களது கடையில் `இங்கு நகை சீட்டு மற்றும் தங்கத்தை முதலீடு செய்தல்; நகையையும், பணத்தையும் டெபாசிட் செய்தல் போன்ற திட்டங்களை எடுக்கையில், ஒரு பவுன் தங்கத்திற்கு மாதம் 600 ரூபாய் வட்டி வீதம் என ஒரு லட்சம் பணத்திற்கு மாதம் 2,500 ரூபாய் வீதம் வட்டி வழங்கப்படும்’ என விளம்பரப்படுத்தி உள்ளனர். இதனை நம்பி சேலம் ஆத்தூர் வாழப்பாடி ஏற்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பலரும் இதில் முதலீடு செய்திருக்கின்றனர். இப்படி சுமார் 400க்கும் மேற்பட்டோரிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் மற்றும் நகைகளை உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர்.
image
கடந்த சில மாதங்களாக அனைவருக்கும் உரிய வட்டி தொகையை கொடுத்து வந்த நகைக்கடை நிர்வாகம், திடீரென கடந்த 3 மாதங்களாக உரிய தொகையை வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே கடந்த ஜனவரி 26 ஆம்தேதி நள்ளிரவு நகைக் கடையில் இருந்த அனைத்து ஆபரணங்களையும் காரில் ஏற்றிக்கொண்டு கடையை காலி செய்து விட்டு அதன் உரிமையாளர்கள் தப்பிச் சென்றுள்ளனர். காரில் அவர்கள் தப்பிச் செல்லும் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருந்தன.
இதையும் படிங்க… திருமணமான 6 மாதத்தில் பெண் மருத்துவர் தற்கொலை; ஆர்.டி.ஓ தலைமையில் தீவிர விசாரணை
image
இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இது குறித்து சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து, தங்கராஜ் மற்றும் அவரது மனைவி லலிதா ஆகியோரை தேடி வந்தனர். ஆனால் இதுவரை அவர்கள் கிடைக்கவில்லை.
image
இந்தநிலையில் இன்று காலை சேலம் பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி ராஜ்குமார் தலைமையிலான 10க்கும் மேற்பட்ட போலீசார் லலிதாம்பிகை ஜூவல்லரி நகை கடையை திறந்து உள்ளே என்னென்ன பொருட்கள் உள்ளது என சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டனர். இதில் நகை மற்றும் முக்கிய ஆவணங்கள் ஏதேனும் உள்ளதா என்றும் சோதனை செய்து பார்த்தபோது உள்ளே ஒரு சில ஆவணங்களை கைப்பற்றினர். ஆனால் நகை ஏதும் சிக்கவில்லை. கடையில் இருந்த நகை பை மற்றும் காலண்டர் ஆகிய பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.