புதிய ஊழல் வழக்கு : லாலுவுக்குச் சொந்தமான 15 இடங்களில் சிபிஐ சோதனை

பாட்னா

பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மீதான புதிய ஊழல் வழக்கில் 15 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.

கடந்த 1991-ம் ஆண்டு 1996-ம் ஆண்டு பிஹார் முதல்வராக ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் இருந்தார்.  அப்போது போலி ஆவணங்கள் மூலம் கால்நடைகளுக்குத் தீவனம் வாங்குவதற்காக அரசுக் கருவூலங்களில் இருந்து ரூ.950 கோடி பணம் மோசடியாகப் பெறப்பட்டதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

இது குறித்து தொடரப்பட்ட பல வழக்குகளில் இதுவரை 5 வழக்குகளில் லாலு பிரசாத் யாதவுக்கு 19 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது  இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 5-வது மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கிய ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் லாலு பிரசாத் யாதவுக்கு மேலும் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ60 லட்சம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது.

இந்த வழக்கில் கடந்த மாதம் லாலு ஜாமீனில் வெளிவந்தார்.   இந்த  சூழலில் அவர் மீது மேலுமொரு வழக்குப் பதிந்து சிபிஐ விசாரணையைத் தொடங்கியுள்ளது. இம்முறை, அரசுப் பணி நியமனங்களில் முறைகேடு செய்ததாக லாலு பிரசாத் யாதவ் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் அவரது மகள் மிசா பாரதி உள்ளிட்ட குடும்பத்தினர் சிலர் மீது வழக்கு பாய்ந்துள்ளது.  இந்த வழக்கின் அடிப்படையில் தற்போது சிபிஐ அதிகாரிகள் தரப்பில் இருந்து ஒரே நேரத்தில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.