லாலு பிரசாத் யாதவுக்கு புதிய சிக்கல் – 15 இடங்களில் சிபிஐ ரெய்டு!

பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் மீது புதிய ஊழல் வழக்கு பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள், அவருக்கு சொந்தமான 15 இடங்களில், சோதனை நடத்தி வருகின்றனர்.

பீகார் மாநில முன்னாள் முதலமைச்சரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவருமான
லாலு பிரசாத்
யாதவ் மீது கால்நடை தீவன ஊழல் வழக்கு உள்ளிட்ட பல்வேறு ஊழல் வழக்குகள் உள்ளன. இதுவரை 5 வழக்குகளில் லாலு பிரசாத் யாதவுக்கு 19 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஐந்தாவது மாட்டுத் தீவன ஊழல் வழக்கில், லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என தீர்ப்பு வழங்கியது ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம். லாலு பிரசாத் யாதவுக்கு மேலும் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 60 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் கடந்த மாதம் தான் லாலு பிரசாத் யாதவ் ஜாமினில் வெளி வந்தார்.

இந்நிலையில் இன்று, லாலு பிரசாத் யாதவ் மீது புதிய ஊழல் வழக்கு ஒன்றை சிபிஐ அதிகாரிகள் பதிவு செய்து, அவருக்கு சொந்தமான 15 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். மத்திய ரயில்வே அமைச்சராக இருந்த போது, ரயில்வே பணிகளுக்கான தேர்வில் முறைகேடு நடந்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்து சோதனை நடத்தி வருகிறது.

பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் மட்டும் 4 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கில், லாலு பிரசாத் யாதவ் மனைவி ரப்ரி தேவி, அவரது மகளும், ராஜ்யசபா எம்பியுமான மிசா பார்தி உள்ளிட்டோரின் பெயர்களும் சேர்க்கப்பட்டு உள்ளன. சிபிஐ சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.