லாலு பிரசாத் யாதவ் மீது பாய்ந்தது புதிய ஊழல் வழக்கு: 15 இடங்களில் சிபிஐ சோதனை

ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவரும் பிஹார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் மீது சிபிஐ புதிய ஊழல் வழக்குப் பதிவு செய்துள்ளது. இதனையடுத்து பிஹாரில் ஒரே நேரத்தில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. லாலு பிரசாத் யாதவ் மட்டுமல்லாது அவரது மகள் மிசா பாரதி உள்ளிட்ட குடும்பத்தினர் சிலர் மீதும் வழக்கு பாய்ந்துள்ளது.

1991-ம் ஆண்டு 1996-ம் ஆண்டு பிஹார் முதல்வராக இருந்தார் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ். லாலு ஆட்சிக் காலத்தில் போலி ஆவணங்கள் மூலம் கால்நடைகளுக்கு தீவனம் வாங்குவதற்காக அரசு கருவூலங்களில் இருந்து ரூ950 கோடி பணம் மோசடியாக பெறப்பட்டது என்பது வழக்கு.

இது தொடர்பாக பல வழக்குகள் தொடரப்பட்டன. இதுவரை 5 வழக்குகளில் லாலு பிரசாத் யாதவுக்கு 19 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 5-வது மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என தீர்ப்பு வழங்கியது ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம். லாலு பிரசாத் யாதவுக்கு மேலும் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ60 லட்சம் அபராதமும் விதித்து ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் இந்த வழக்கில் கடந்த மாதம் தான் லாலு ஜாமீனில் வெளிவந்தார்.

இத்தகைய சூழலில் அவர் மீது மேலுமொரு வழக்கு பதிந்து சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளது. இந்தமுறை, அரசுப் பணி நியமனங்களில் முறைகேடு செய்ததாக லாலு பிரசாத் யாதவ் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.