இந்தியாவில் கொரோனா பாதிப்பு சற்று உயர்வு- 15 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர்

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரித்துள்ளது. நேற்று நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,259 ஆக இருந்தது. இன்று (சனிக்கிழமை) 2,323 ஆக உயர்ந்துள்ளது.

பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. ஓரிரு நகரங்களில் மட்டுமே வைரஸ் தாக்கம் சற்று அதிகமாக உள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 25 பேர் பலியாகி உள்ளனர். சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

தற்போது நாடு முழுவதும் 14,996 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் டிஸ்சார்ஜ் ஆகும் நிலையில் இருக்கிறார்கள். எனவே வரும் நாட்களில் கொரோனா மேலும் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று 2,346 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கிடையே கொரோனாவை முழுமையாக ஒழிக்கும் வகையில் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி போடுவது அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் சுமார் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதுவரை நாடு முழுவதும் 192.12 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அடுத்த மாதம் சிறப்பு முகாம்கள் நடத்தி அதிக பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.