சிபிஐ அதிகாரிகளை தடுத்த கட்சி தொண்டர்களுக்கு பளார் விட்ட ரப்ரிதேவி

பாட்னா: சிபிஐ அதிகாரிகளை தடுத்த தனது கட்சி தொண்டர்களின் கன்னத்தில் லாலுவின் மனைவி ரப்ரிதேவி அறைந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், கடந்த 2004-2009ம் ஆண்டு வரை ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ரயில்வேயில் வேலை வாங்கி கொடுப்பதற்காக, முக்கிய இடங்களில் உள்ள நிலங்களை லஞ்சமாக வாங்கி கொண்டதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக, டெல்லி, பாட்னா உள்ளிட்ட நகரங்களில் அவருக்கும், குடும்பத்தினருக்கும் சொந்தமான 15க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். பாட்னா இல்லத்தில் லாலுவின் மனைவியும், இம்மாநில முன்னாள் முதல்வருமான ரப்ரிதேவியிடம் 12 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்நிலையில், விசாரணை முடித்து வெளியே சென்ற சிபிஐ அதிகாரிகளை ராஷ்டிரிய ஜனதா தள நிர்வாகிகள் முற்றுகையிட்டு கோஷமிட்டனர். இதை பார்த்து ஓடிய வந்த ரப்ரிதேவியும், லாலுவின் மூத்த மகன் தேஜஸ்வி யாதவும் தொண்டர்களை சமாதானம் செய்தனர். ஒரு கட்டத்தில் சில தொண்டர்களின் கன்னத்தில் ரப்ரி பளார் பளார் என அறையும் விட்டார். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.