ஸ்ரீநகர்:
ஜம்மு – காஷ்மீர் மாநிலம் ரம்பன் மாவட்டம், கூனி நல்லா பகுதி அருகே சுரங்கப்பாதை தோண்டும் பணி நடைபெற்று வந்தது. கடந்த வியாழக்கிழமை இரவு 10.15 மணியளவில் சுரங்கப்பாதையின் ஒரு பகுதியானது திடீரென இடிந்து விழுந்தது. இதனால் தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து மீட்புக்குழுவினர் மீட்பு பணியை தொடங்கினர்.
மீட்பு பணியின்போது 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், நேற்று புதிதாக நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து மீட்புப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர், இன்று மீண்டும் மீட்புப்பணிகள் தொடங்கியது.
இந்த மீட்பு பணியின்போது ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது. மேலும் 6 பேரைக் காணவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த விபத்தானது துரதிர்ஷ்டவசமானது என்று மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கவலை தெரிவித்துள்ளார்.