நெடுஞ்சாலை சுவர் இடிந்து விபத்து – உத்தரகாண்டில் 10 ஆயிரம் யாத்ரீகர்கள் சிக்கித் தவிப்பு

உத்தரகாண்டில் யமுனோத்ரி நெடுஞ்சாலையின் பாதுகாப்பு சுவர் இடிந்து விழுந்ததில் 10 ஆயிரம் யாத்ரீகர்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்து வருகின்றனர்.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் உள்ளது யமுனோத்ரி கோயில். இந்தக் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் சென்று வருவது வழக்கம். இதனிடையே, கடும் மழையால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக ரிஷிகேஷ் – யமுனோத்ரி நெடுஞ்சாலை கடந்த இரண்டு நாட்களாக மூடப்பட்டிருந்தது. மழைப்பொழிவு குறைந்ததை அடுத்து நேற்று காலை இந்த நெடுஞ்சாலை மீண்டும் திறக்கப்பட்டது. இதனால் ஏராளமான யாத்ரீகர்கள் அந்த நெடுஞ்சாலை வழியாக யமுனோத்ரி கோயிலுக்கு சென்று கொண்டிருந்தனர்.
image
இந்நிலையில், நேற்று மாலை ரிஷிகேஷ் – யமுனோத்ரி நெடுஞ்சாலையின் பாதுகாப்பு சுவரின் ஒருபகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து முற்றுலமாக தடைப்பட்டு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. மலைப்பாதை என்பதாலும், தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் இடிந்து விழுந்த சுவர்களை அப்புறப்படுத்துவதில் பெரும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
image
இருந்தபோதிலும், போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ள சிறிய ரக வாகனங்களை மீட்டு வேறு பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், கனரக வாகனங்கள் தொடர்ந்து நெரிசலில் சிக்கியுள்ளதாக தெரிகிறது. மீட்புப் பணிகள் முடுக்கவிடப்பட்டுள்ளதாக உத்தரகாண்ட் அரசு தெரிவித்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.