நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 124 -வது மலர் கண்காட்சியை நேற்று தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். ஊட்டியில் உள்ள தமிழகம் விருந்தினர் மாளிகையில் தங்கியிருக்கும் முதல்வர், ராஜீவ் காந்தி நினைவு தினமான இன்று காலை ஊட்டி மத்திய பேருந்து நிலையம் பகுதிக்குச் சென்றார். அங்குள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தி, அவரின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
முதல்வர் மரியாதை செலுத்தும் போது ஊட்டி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ கணேஷ் உடன் இருக்கவில்லை. அதே வேளையில், இந்த நிகழ்ச்சிக்கு செய்தியாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து, நவீன ஊட்டி நகரம் நிர்மாணிக்கப்பட்டு 200 ஆண்டை போற்றும் வகையில் நீலகிரியின் தந்தை என அழைக்கப்படும் ஜான் சல்லிவனின் உருவச் சிலையை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும் தலைமையேற்றார். இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மீண்டும் தமிழகம் மாளிகை திரும்பிய முதல்வர், பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 6 பேரின் விடுதலை குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.