ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணி உச்ச நீதிமன்றம் அனுமதி மறுப்பு

புதுடெல்லி: ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக் கோரிய மேல்முறையீட்டு மனுவும், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்களும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, ஆலை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம், ‘ஸ்டெர்லைட் ஆலையை பராமரிக்க அனுமதிக்க வேண்டும் என்ற இடைக்கால மனுவை உடனடியாக விசாரித்து, சில நிவாரணங்களை வழங்க வேண்டும்,’ என தெரிவித்தார். இதை நிராகரித்த நீதிபதிகள், ‘ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு பணி மேற்கொள்ளவும், மூலப்பொருட்களை (ஜிப்சம்) எடுத்துக் கொள்வதற்கும் அனுமதி கோரி வேதாந்தா தரப்பு தாக்கல் செய்துள்ள இடைக்கால மனு மீது தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்,’ என உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.