விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூரை அடுத்த டி.எடையார் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). மரம் ஏறும் கூலித் தொழிலாளியான இவரின் மனைவியும் விவசாயக் கூலி வேலை செய்பவர். இந்தத் தம்பதியின் மகள் அபிநயா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) அதே பகுதியில் உள்ள பள்ளியில் கடந்த 2020-ம் ஆண்டு 9-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். கொரோனா பரவல் காரணமாக அப்போது பள்ளிகள் மூடப்பட்டிருந்த சூழலில் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் படித்து வந்தார். தாய் தந்தை இருவருமே வேலைக்கு சென்றதால் பெரும்பாலான நேரங்களில் அபிநயா வீட்டில் தனியாகவே இருந்திருக்கிறார்.
அபிநயாவுக்கு மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக மாதவிடாய் பிரச்னை இருந்ததால், அவரை அவர் தாய் மருத்துவரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது அபிநயாவை பரிசோதித்த மருத்துவர், அவர் கர்ப்பமாக இருந்தது தெரிந்து அதிர்ச்சியடைந்திருக்கிறார். அதையடுத்து அந்த தகவலை கேட்டு அபிநயாவின் தாயும் அதிர்ச்சியடைந்திருக்கிறார். அதையடுத்து அபிநயாவிடம் விசாரித்தபோது, மூன்று மாதங்களுக்கு முன்பு மதுபோதையில் வீட்டுக்கு வந்த அப்பா தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார் என்றும் அதன்பிறகு அடிக்கடி தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தார் என்றும் கூறியிருக்கிறார் அபிநயா.
அதைக்கேட்டு அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார் அவர் தாய். அதையடுத்து, விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் அடிப்படையில், ராமமூர்த்தி மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த 24.12.2020 அன்று கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருக்கும் நிலையில், கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக விசாரணைக் கைதியாக சிறையில் இருந்து வந்தார் ராமமூர்த்தி. பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்ததால் அவர் மனைவி உள்ளிட்ட உறவினர்கள் யாரும் அவரைப் பார்ப்பதற்கும், ஜாமீனில் எடுப்பதற்கும் வரவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் மன விரக்தியில் இருந்துவந்த ராமமூர்த்தி, “குடி என்னை மிருகமாக்கிடுச்சு” என சக கைதிகளிடம் கூறி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில்தான், இன்று மதியம் 1.30 மணிக்கு சிறை வளாகத்தில் இருந்த மரத்தில் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்திருக்கிறது சிறைத்துறை. மேலும், இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர் முதுநகர் காவல்துறையினர்.