மணி, மதுரை
மதுரை மாவட்டம், மேலூர் அருகே முக்கம்பட்டி சிவன் நாயகி அம்மன் மாசி களரியையொட்டி மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளான மேலூர், திருவாதவூர், ஆமூர், வெள்ளரிப்பட்டி, ஒத்தக்கடை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட காளைகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் கோவிலில் வழிபாடு நடத்திய பின், போட்டியில் கலந்து கொண்ட காளைகளுக்கு வேஷ்டி-துண்டு வழங்கப்பட்டு வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்ட காளகளை மாடுப்பிடி வீரர்களும் இளைஞர்களும் ஆர்வமுடன் பிடித்தனர்.
இந்நிலையில் போட்டியில், விடுமுறை தினமான இன்று ஏராளமான சிறுவர்களும், 15 வயதிற்கு குறைவான மாணவர்களும் பங்கேற்று அவிழ்த்துவிடப்பட்ட காளைகளை பிடிக்க முயன்றதால், அசம்பாவிதங்களை தடுக்க காவல்துறையினர் பலமுறை ஒலிபெருக்கியில் எசாரிக்கை செய்தும் கேட்காததால் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்த மஞ்சுவிரட்டு போட்டிக்காக காளைகளை அழைத்து வந்திருந்த மாட்டின் உரிமையாளர்கள் காளைகளை திறந்த வெளியில் பல்வேறு பகுதிகளில் அவித்து விட்டனர். இதில் காளைகளை பிடிக்க முயன்றவர்கள் மற்றும் பார்வையாளர்கள் என 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“