சிதம்பரத்தை குலுங்க வைத்த சிவனடியார்கள்: யூடியூப் சேனலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Chidambaram Sivanadiyars protest against Youtube channel: சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டத்துக்காக சிவனடியார்கள் பல்லாயிரக்கணக்கில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உலகப் புகழ்பெற்ற நடராசர் கோயில் சிதம்பரத்தில் உள்ளது. சைவத் திருத்தலங்களில் இது முதன்மையானதாகும். வெளிநாடு, வெளி மாநிலம், வெளி மாவட்டம் மற்றும் உள்ளூர் பக்தர்கள் ஏராளமானோர் தினசரி கோயிலுக்கு வந்து நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாளை வழிபட்டு செல்வர். எப்பொழுதும் கோயிலில் பக்தர்கள் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும்.

இந்த நிலையில், சுவாமி நடராஜரை பற்றி விமர்சனம் செய்து ஒரு யூடியூப் சேனலில் செய்தி வந்தது. இதற்கு பக்தர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

சுவாமி நடராஜர் பற்றி தவறான கருத்துகளை வெளியிட்ட யூடியூப் சேனல் நிர்வாகியை கைது செய்யக் கோரி சிவனடியார்கள் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று (மே.23) சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதனையொட்டி இன்று அதிகாலை முதலே சிவனடியார்கள் சிதம்பரம் நகரில் குவிந்தனர். இன்று மாலை 4 மணி அளவில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிதம்பரம் நடராஜர், தில்லை காளி ஆகிய சுவாமிகள் நடனத்தை அவதூறாக ஒளிபரப்பிய விவகாரத்தில் அந்த யூடியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 10,000 க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் குவிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி சிதம்பரத்தை குலுங்கச்செய்தனர்.

இதையும் படியுங்கள்: சாதி மறுப்பு திருமண தம்பதிக்கு தடை? ஆர்.டி.ஓ விசாரணைக்கு தஞ்சை ஆட்சியர் உத்தரவு

முன்னதாக, நடராசர் கோயிலில் உள்ள கனகசபை மீதேறி சிவ வாத்தியங்கள் முழங்கிட தெய்வத்தமிழ் பேரவையினர் தேவாரம், திருவாசகம் பாடி மகிழ்ந்தனர்.

சிதம்பரத்தில் விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன், கடலூர் எஸ்பி சக்தி கணேசன் ஆகியோர் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். பல்லாயிரக்கணக்கான சிவ பக்தர்கள் குவிந்ததால் பாதுகாப்பு நலன் கருதி கடலூர் மாவட்டத்திலிருந்து மேலும் நூற்றுக்கணக்கான போலீஸார் வரவழைக்கப்பட்டனர்.

க.சண்முகவடிவேல்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.