சிவசேனா தேர்ந்தெடுக்கும் வேட்பாளரை ஆதரிப்போம்: சரத்பவார் அறிவிப்பு

புனே :

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். மராட்டிய மாநிலத்தை சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்களான பியூஷ் கோயல், வினய் சகஸ்ரபுதே, விகாஸ் மகாத்மே, ப.சிதம்ரபம், பிரபுல் பாடேல் மற்றும் சஞ்சய் ராவத் ஆகியோரின் பதிவக்காலம் ஜூலை 4-ந் தேதி முடிவடைகிறது. இந்த பதவிகளுக்கு ஜூன் 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மராட்டிய சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பா.ஜனதாவுக்கு 2 மாநிலங்களவை உறுப்பினர்களையும், ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தலா ஒரு இடத்தையும் கைப்பற்ற முடியும். எனவே 6-வது உறுப்பினரை தேர்வு செய்வதில் கடும் போட்டி நிலவும் என தெரிகிறது.

இந்நிலையில் கோலாப்பூர் அரசு குடும்பத்தை சேர்ந்தவரும், சத்ரபதி சிவாஜி மகாராஜின் வழித்தோன்றலுமான சம்பாஜிராஜே மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில், சுயேட்சையாக போட்டியிட போவதாக சமீபத்தில் அறிவித்தார். தன்னை ஆதரிக்குமாறு அனைத்து கட்சிகளுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்பு அவர் நாடாளுமன்ற மக்களவையில் ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினராக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரிடம் வரும் மாநிலங்களவை தேர்தலில் சம்பாஜிராஜேவுக்கு ஆதரவு அளிப்பீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து அவர் கூறியதவாது:-

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நங்கள் மாநிலங்களவையில் 2 வேட்பாளர்களை கேட்டிருந்தோம். எங்களுக்கு அவை கிடைத்தன. ஆனால் இந்த முறை எங்களுக்கு ஒரு இடம் மட்டும் கிடைக்கும். எங்கள் வேட்பாளரை ஆதரித்த பிறகு சிவசேனா தேர்வு செய்யும் ஒரு வேட்பாளரை ஆதரிப்பதற்கான வாக்குகள் மட்டுமே எங்களிடம் இருக்கும். அவர்கள் சம்பாஜிராஜே அல்லது வேறு எந்த வேட்பாளரையும் தேர்வு செய்யலாம். நாங்கள் சிவசேனாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளரை ஆதரிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சில மூத்த சிவசேனா தலைவர்கள் வரும் மாநிலங்கவை தேர்தலில் கட்சி 2 வேட்பாளர்களை நிறுத்தும் என கூறியுள்ளனர். இந்த முடிவு சாம்பாஜிராஜேவுக்கு இடையூறு விளைவிக்கும் என கருதப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.