ஜூன் மாதத்தில் 3 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ரேஷன் கடை ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் வருகிற ஜூன் மாதம் 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ரேஷன் கடை ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு ரேஷன் கடை ஊழியர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று நாகையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பிறகு தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் போராட்டக் குழுவின் பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ‘ஜூன் மாதம் 10-ம் தேதி மாநிலம் முழுவதும் பணியாளர்களை திரட்டி சென்னையில் தமிழக முதலமைச்சரை சந்திப்பதற்கான காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்றும் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கத்தோடு இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு ரேஷன் கடை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் ஜூன் மாதம் 7,8,9 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்