பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: நவோமி ஒசாகா, கிரெஜ்சிகோவா அதிர்ச்சி தோல்வி

பாரீஸ்,

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான நவோமி ஒசாகா (ஜப்பான்) 5-7, 4-6 என்ற நேர்செட்டில் அமெரிக்க வீராங்கனை அமன்டா அனிசிமோவாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். இதேபோல் நடப்பு சாம்பியன் பார்போரா கிரெஜ்சிகோவா (செக்குடியரசு) 6-1, 2-6, 3-6 என்ற செட் கணக்கில் 19 வயது பிரான்ஸ் வீராங்கனை டியானி பாரியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து நடையை கட்டினார்.

‘நம்பர் ஒன்’ வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-2, 6-0 என்ற நேர்செட்டில் உக்ரைனின் லிசியா சுரெங்காவை எளிதில் தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். ஆன்ட்ரியா பெட்கோவிச் (ஜெர்மனி), விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்), பியான்கா ஆன்ட்ரீஸ்கு (கனடா), பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு) ஆகியோர் தங்கள் ஆட்டங்களில் வெற்றியை ருசித்து அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் 21 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 6-2, 6-2, 6-2 என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்சனை ஊதித்தள்ளி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் 3 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று இருக்கும் சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்கா 6-2, 3-6, 6-7 (2-7), 3-6 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீரர் காரென்டின் முடெட்டிடம் வீழ்ந்தார். இங்கிலாந்து வீரர்கள் கேமரூன் நோரி, டேனியல் இவான்ஸ் தங்களது முதல் தடையை வெற்றிகரமாக கடந்தனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.