புதுச்சேரிக்கு மழை நிவாரண நிதி ரூ.17.86 கோடி கிடைப்பது எப்போது?

புதுச்சேரி: மழைக்கால நிவாரணமாக அறிவிக்கப்பட்ட 17.86 கோடி ரூபாயை உடனடியாகவழங்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்திடம் புதுச்சேரி அரசு மீண்டும்கோப்பு அனுப்பி வலியுறுத்தி உள்ளது.

புதுச்சேரியில் கடந்தாண்டு இறுதியில் அதிகளவு கனமழை பெய்தது. மழையால் விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, அரசு சிவப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.5 ஆயிரம், மஞ்சள் கார்டுதாரர்களுக்கு ரூ.4 ஆயிரத்து 500 மழை நிவாரணமாக வழங்கியது.

நிவாரணம் வழங்கல்

சாகுபடி செய்த பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார். அதன்படி, கடந்த மார்ச் மாதம் விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை ரூ.7.10 கோடியை அரசு வழங்கியது. இதன் மூலம் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளை சேர்ந்த 7 ஆயிரத்து 16 விவசாயிகள் பயனடைந்தனர்.கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான நிவாரணத்தொகை புதுச்சேரியை சேர்ந்த 6 ஆயிரத்து 54 விவசாயிகளுக்கு ரூ.5.97 கோடி வழங்கப்பட்டது. காரைக்காலை சேர்ந்த 731 விவசாயிகளுக்கு ரூ.97.55 லட்சம், ஏனாமை சேர்ந்த 231 விவசாயிகளுக்கு ரூ.15.90 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.இந்த நிவாரணம் அனைத்தும் விவசாயிகளின் வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டது.

ரூ. 17.86 கோடி எங்கே?

இருப்பினும், கனமழையால் பாதிக்கப்பட்ட வீடுகள், கால்நடை உள்ளிட்ட பிற இழப்புகளுக்கு இன்னும் நிவாரணம் வழங்கப்படவில்லை. கடந்தாண்டு, இயற்கை பேரிடரை எதிர்கொண்ட தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களுக்கு 1,682 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.இதில், புதுச்சேரிக்கு 17.86 கோடி ரூபாய் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால், இது வரை புதுச்சேரி மாநிலத்திற்கு இத்தொகை கிடைக்கப் பெறவில்லை.

latest tamil news

இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட மழை நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என மத்திய உள்துறைக்கு மாநில அரசு சார்பில் மீண்டும் கோப்பு அனுப்பி வலியுறுத்தப் பட்டது.புதிய தலைமைச்செயலர் ராஜிவ் வர்மாவும், புதுச்சேரிக்கு ஒதுக்கப்பட்ட மழை நிவாரணத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் என நேரில் வலியுறுத்தியுள்ளார்.

பேரிடர் நிதி உயருமா?

மாநில பேரிடர் நிதியாக மத்திய அரசு ஆண்டுதோறும் ரூ. 5 கோடி வழங்குகிறது. மாநில அரசு பேரிடர் நிதியாக 1.5 கோடி வழங்குகிறது. இந்த 6.5 கோடி ரூபாயை கொண்டே மழைக்காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, தங்குமிடம், போக்குவரத்து என அனைத்து செலவுகளையும் சமாளிக்க வேண்டியுள்ளது.

ஆனால் பேரிடர் நிதி பெரிய அளவில் இல்லாததால் ஒவ்வொரு ஆண்டும் மழை நிவாரணத்தின்போது, பேரிடர் துறை உடனடியாக துயர் துடைக்க முடியாமல் திணறி வருகிறது. பிற துறைகளில் இருந்து உதவிகளை எதிர்பார்த்து நிவாரணம் வழங்கி வருகிறது.எனவே பேரிடர் நிவாரண நிதியை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசிடம் புதுச்சேரி அரசு விரைவில் வலியுறுத்த திட்டமிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.