விரைவில் ‘டிமான்டி காலனி’படத்தின் 2-ம் பாகம்… அஜய் ஞானமுத்து பேட்டி

ரசிகர்களின் வரவேற்பை பெற்ற டிமான்ட்டி காலனி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவுள்ளது.

கடந்த 2015-ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தில் நடிகர்கள் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

image

இதன் இரண்டாம் பாகத்திலும் அருள்நிதியே நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குனர் அஜய் ஞானமுத்து இப்படத்தை தயாரிக்க, அவரது இணை இயக்குனரான வெங்கி வேணுகோபால் இந்தப் படத்தினை இயக்குகிறார். முந்தைய பாகத்தில் 4 நண்பர்கள் உள்ள ஒரு வீட்டில் பேயொன்றின் தாக்கத்தினால், நால்வருமே உயிரிழந்தது போன்ற காட்சியமைப்புகள் இருக்கும். இருந்தபோதிலும் அப்படத்தின் தொடர்ச்சியாகவே இப்படம் அமையும் என சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க… ‘உன்னை நீ நம்பினால்’ – தினேஷ் கார்த்திக் உற்சாக ட்வீட்

இதுகுறித்து அஜய் ஞானமுத்து தனது பேட்டியொன்றில், “முந்தைய படத்தின் தொடர்ச்சியாகவே இப்படம் இருக்கும். அதில் வந்த கதாபாத்திரங்களும், அவர்களுடன் சில புதிய முகங்களும் வருவர். அதில் சொல்லப்பட்ட வரலாற்றை இப்படத்தில் தேவைக்கேற்ப மாற்றி அமைத்திருக்கிறோம். இருப்பினும் அதனுடைய முன்னுரையுடன் அதே தொடர்ச்சியாகவே இப்படம் அமையும்” என்றுள்ளார்.

image

கடந்த ஆண்டு வெளியான ‘களத்தில் சந்திப்போம்’ வெற்றிக்குப்பிறகு அருள்நிதி ‘தேஜாவு’, ‘டைரி’, ‘D ப்ளாக்’ உள்ளிட்டப் படங்களில் தற்போது நடித்து வருகிறார். இதில், ‘D ப்ளாக்’ படம் வரும் ஜூலை மாதம் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. அருள்நிதி நடிப்பில்  15-வது படமாக உருவாகியுள்ள அப்படத்தினை ‘எரும சாணி’ யூடியூப் குழுவின் விஜய் குமார் ராஜேந்திரன் இயக்கியுள்ளார். டி பிளாக் படத்தக்கு, ரான் ரத்தன் யோகான் இசையமைக்க, தயாரிப்பையும் ஒளிப்பதிவையும் அரவிந்த் சிங் செய்துள்ளார். இதேபோல தேஜாவு படமும், படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் ரிலீஸூக்காக காத்திருக்கிறது.

image

டிமான்டி காலனி இரண்டாம் பாகம் குறித்து பேட்டியொன்றில் பேசியிருக்கிறார் அஜய் ஞானமுத்து. தனது பேட்டியில் அவர், “அருள்நிதி எப்போதுமே என்னை தயாரிப்பு பணிகளில் ஈடுபட சொல்லி அறிவுரை சொல்லுவார். அந்தவகையில் நாங்கள் டிமான்டி காலனி இரண்டாம் பாகம் குறித்து அடிக்கடி பேசுவோம். என்னுடைய இயக்க திறமைக்கு முதன் முதலாக நம்பிக்கையுடன் கைகொடுத்தவர் அவர்தான். ஆகவே அவரை வைத்து நான் அடுத்து செய்யும் சினிமா, இன்னும் பிரம்மாண்டமாகவும் பெரிதாகவும் இருக்கவேண்டுமென்று நினைத்தேன். அதற்கேற்றபடி டிமான்டி காலனி 2 அமைய உள்ளது. இப்படத்துக்கான கதையை அவரிடம் சொன்னதுமே `இது ரொம்ப வித்தியாசமான கதையா இருக்கு’ என சொல்லி, உடனே இதில் இணைந்துவிட்டார்’‘என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.