கரூர்: “பாஜகவின் பி டீம்தான் சீமான்” என கரூர் எம்.பி. செ.ஜோதிமணி குற்றம்சாட்டினார்.
கரூர் எம்.பி. செ.ஜோதிமணி கரூரில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது, ”முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருந்ததற்கு பதில் அளித்திருந்தேன். அதற்கு நேர்மையாக பதில் அளிக்க முடியாத சீமான், மிகவும் ஆபாசமாக, வக்கிரமாக, என்னை தனிப்பட்ட முறையில் தாக்கும் வகையில் பதில் சொல்லியுள்ளார்.
நடிகை ஒருவர் ஆதாரத்துடன், பொதுவெளியில் சீமான் மீது குற்றச்சாட்டு வைத்ததுடன் அதற்கு புகாரும் அளித்திருந்தார். அதில் உண்மை இல்லையெனில் சீமான் விஜயலட்சுமி மீது மானநஷ்ட வழக்கு தொடுத்திருக்கலாமே? அதை விடுத்து இப்படி ஆபாசமாக பேசுவதுதான் சீமானின் தரம், சீமானின் தகுதி என்பது இதுதான்.
நான் மட்டுமல்ல சீமான் மீது பல ஆண் தலைவர்கள் குற்றச்சாட்டுகள் வைத்துள்ளனர். அப்போது எதிர்த்து பேச முடியாத சீமான், ஒரு பெண் மக்களவை உறுப்பினரான என்னை கையைப் பிடித்து இழுத்தேனா? இங்கு வா என்று அழைத்தேனா? எனக் கூறி விட்டு பின் சகோதரி என்கிறார். சகோதரி என கூறும் பெண் மீதே அவ்வளவு பாலியல் வக்கிரம், ஆபாசமும் இருக்கிறது. அதனை அவர் அறியாமல் வெளி உலகுக்கு காட்டியுள்ளார்.
அரசியலில் சீமான் போன்றவர்கள் பெண்கள் மீது அவதூறுகள் பரப்புவது, ஆபாசத் தாக்குதல் மேற்கொள்வது, அருவெறுக்கத்தக்க வகையில் பேசுவது, இதைச் செய்தால் அவர்கள் அரசியலிருந்தே ஓடிவிடுவார்கள், பயந்து பதுங்கி விடுவார்கள் என நினைக்கின்றனர். சீமான் போன்ற குற்றவாளிகள், பாலியல் சுரண்டல்களில் ஈடுபடுபவர்கள் தான் இதற்கு பயப்படவேண்டும்.
ஆபாசத் தாக்குதலை எதிர்க்கொள்வது எனக்கு புதிதல்ல. அருவெறுக்கத்தக்க விமர்சனங்கள் எனக்கு புதிதல்ல. பாஜக இதனைத் தொடர்ந்து செய்து வருகிறது. பாஜகவின் பி டீம்தான் சீமான். அதனால்தான் தொடர்ந்து இதைச் செய்கிறார்.
எனக்கு வாக்களித்த கரூர் மக்களவை மக்கள் மானங்கெட்டு வாக்களித்துள்ளனர் எனக் கூறியுள்ளார். இதனை வன்மையாக கண்டிக்கிறேன். அதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். கரூர் மக்களவைத் தொகுதி மக்கள் மட்டுமல்ல, தமிழர்கள் உழைத்து நேர்மையாக வாழ்பவர்கள். சீமான் போல அப்பாவி இலங்கைத் தமிழ் மக்கள், தமிழ் மக்களை சுரண்டி உல்லாச, ஆடம்பர வாழ்க்கை வாழுபவர் கிடையாது.
நாம் தமிழர் கட்சியில் உள்ள நற்குணம் கொண்ட தம்பி, தங்கைகளை சீமான் போன்ற ஆபாச, வக்கிர அரசியல்வாதி தவறாக வழி நடத்தி விடக்கூடாது என்பதற்காக சீமானை தொடர்ந்து தோலுரிக்கும் பணியைச் செய்கிறோம். தொடர்ந்து செய்வோம்” என்றார்.
கரூர் மாவட்ட பொருளாளர் மெய்ஞானமூர்த்தி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் தென்காசி எஸ்கேடி காமராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.