ஜி ஸ்கொயர் (G Square) பிரச்னையில் பத்திரிகை நிறுவனத்தின் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் அவசர, அவசரமாக குற்ற வழக்கு பதிவு செய்திருப்பதற்கு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்த அவரின் கண்டா செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
“தி.மு.க.வின் அதிகார மையத்தோடு ஜி ஸ்கொயர் (G Square) ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில், காவல்துறையினரின் இந்த அதிவேக நடவடிக்கை அதனை உறுதிப்படுத்துவது போல அமைந்திருக்கிறது.
ஜி ஸ்கொயர் (G Square) பிரச்னையில் பத்திரிகை நிறுவனத்தின் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் அவசர, அவசரமாக குற்ற வழக்கு பதிவு செய்திருப்பது கண்டனத்திற்குரியது.
உலகத்திற்கே கருத்து சுதந்திரத்தையும் பத்திரிகை சுதந்திரத்தையும் கற்று கொடுத்தவர்கள் போல பேசும் தி.மு.க, ஊடகங்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படுவது அதன் சுயரூபத்தைக் காட்டுவதாக இருக்கிறது.
தவறாக செய்தி வெளியிடப்பட்டதாகக் கருதினால் நீதிமன்றத்திற்குச் சென்று சட்டப்படியான நிவாரணம் தேடுவதுதான் சரியாக இருக்க முடியும். அதை விட்டுவிட்டு அதிகாரம் கையில் இருக்கிறது என்பதற்காக காவல்துறையை ஏவி விட்டு பத்திரிகை நிறுவனத்தை சார்ந்தவர்கள், பத்திரிக்கையாளர்கள், பெண்கள் மீதெல்லாம் கிரிமினல் வழக்கு பதிவு செய்வதென்பது அப்பட்டமான அத்துமீறலாகும்.
அதிகாரம் தரும் போதை நீண்ட நாள் நிலைக்காது என்பதை தி.மு.க.வினர் உணர வேண்டும்” என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஜி ஸ்கொயர் (G Square) பிரச்னையில் பத்திரிகை நிறுவனத்தின் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் அவசர, அவசரமாக குற்ற வழக்கு பதிவு செய்திருப்பது கண்டனத்திற்குரியது. (1/5) @CMOTamilnadu
— TTV Dhinakaran (@TTVDhinakaran) May 24, 2022