ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் ரியல்டார்ஸ் நிறுவனம் அளித்த புகாரின் பேரில் ஜூனியர் விகடன், சவுக்கு சங்கர், யூடியூபர் மரிதாஸ் ஆகியோர் மீது சென்னை போலீஸார் வழக்குப் பதிவு செய்ததையடுத்து, ஜூனியர் விகடன், ஜி ஸ்கொயர் ரியல்டார்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் நிர்வாக இயக்குநர் மற்றும் ராமஜெயம் என்கிற பாலா மீது புகார் அளித்துள்ளது.
ஜி ஸ்கொயர் நிறுவனம் ஜூனியர் விகடன் மீது புகார் அளித்துள்ளது…வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஜூனியர் விகடனும், ஜி ஸ்கொயர் ரியல்டார்ஸ் நிறுவனத்தின் நிறுவனர், நிர்வாக இயக்குநர் ராமஜெயம் என்கிற பாலா மீது புகார் அளித்துள்ளது. இந்த விவகாரத்தில் ஜூனியர் விகடன் கூறுவது என்ன?
ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் ரியல்டார்ஸ் நிறுவனம் அளித்த புகாரின் பேரில் ஜூனியர் விகடன், சவுக்கு சங்கர் மற்றும் யூடியூபர் மரிதாஸ் ஆகியோர் மீது சென்னை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, ஜூனியர் விகடன் தற்போது, கெவின், ஜி ஸ்கொயர் ரியல்டர்ஸ் தனியார் நிறுவனத்தின் நிறுவனர் நிர்வாக இயக்குநர் ராமஜெயம் என்கிற பாலா மீது புகார் அளித்துள்ளது.
ஜி ஸ்கொயர் ரியல்டார்ஸ் என்கிற ரியல் எஸ்டேட் தனியார் நிறுவனம் அதன் நிறுவனர் ராமஜெயம் சார்பில் மே 21 ஆம் தேதி புருஷோத்தம் குமார் என்ற நபர் அளித்த புகாரில் இந்த பிரச்னை தொடங்கியது.
இந்த புகார் அளித்த புருஷோத்தம், ஜனவரி 18 ஆம் தேதி ராமஜெயத்திற்கு கெவின் என்ற நபரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் அவர் விகடன் குழுமத்தின் இயக்குநர்களுடன் நெருங்கிய கூட்டாளி என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், ஜி ஸ்கொயர் ரியல்டார்ஸ் நிறுவனம் குறித்த செய்தியை பத்திரிகையில் வெளியிடுவதை நிறுத்துவதற்காக கெவின் அந்த பத்திரிகை சார்பில் ரூ.50 லட்சம் கேட்டதாக கூறப்பட்டுள்ளது.
ஆனால், புருஷோத்தம் பணம் கொடுக்க முடியாது என்று கூறியதைத் தொடர்ந்து, ஜனவரி 23, 2022 இல் ஜு.வி-யில் அந்த செய்திக் கட்டுரை வெளியானது என்றும் ஜி ஸ்கொயர் ரியல்டார்ஸ் நிறுவனத்திற்கு திமுகவுடன் தொடர்பு இருப்பதாகவும், பல்வேறு அரசு அதிகாரிகள் சுமூகமாக செயல்பட உதவினார்கள் என்று அந்த செய்திக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், அந்த புகாரில், பணம் தராவிட்டால், சவுக்கு சங்கர், மரிதாஸ் போன்ற சமூக வலைதளங்களில் செயல்படுபவர்களிடம் ஜி ஸ்கொயர் ரியல்டார்ஸ் நிறுவனத்தைப் பற்றி அவதூறாக செய்தி எழுத வைப்பேன் என்று கெவின் மிரட்டியதாகவும் புருஷோத்தம் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த புகாரின் பேரில், கடந்த மே 22 ஆம் தேதி மயிலாப்பூர் போலீஸாரால் கைது செய்யப்பட்ட கெவின் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், கெவினுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்று ஜூனியர் விகடன் உறுதியாகக் கூறியுள்ளது. ஜூனியர் விகடன் ஆசிரியரும் பதிப்பாளருமான கலைச்செல்வன், பொய்ப் புகார் அளித்து பத்திரிகையின் வாயை அடைக்க முயன்ற கெவின், ராமஜெயம் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை மாநகரக் காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.
இந்த புகாரில், ஜூனியர் விகடன் பத்திரிகை, அரசியல் அமைப்பின்படி, கருத்துச் சுதந்திரத்தின் ஒரு அங்கமாக பொதுமக்களின் பிரச்னைகளைப் பற்றி செய்தியை வெளியிட அச்சு ஊடகங்களுக்கு உள்ள உரிமையைக் குறிப்பிட்டுள்ளது.
இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 4 மாதங்களுக்குப் பிறகு புகார் கொடுக்கப்பட்டதையும், அதுவும் பிப்ரவரியில் இந்த நிறுவனம் தங்களுக்கு அனுப்பிய லீகல் நோட்டீசும் புகாரும் ஒன்றுதான் என்று ஜூ.வி. ஆசிரியரும் பதிப்பாளருமான கலைசெல்வன் குறிப்பிட்டுள்ளார். “3.2.2022 அன்று அவதூறு செய்ததாக இழப்பீடு கோரி வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டதற்கு 7.2.2022 தேதியிட்ட ஜூனியர் விகடனின் பதிலுக்குப் பதில் அளிக்காமல், ஜி ஸ்கொயர், இதழின் இயக்குநர்கள் மற்றும் ஆசிரியரை பொய்யாகக் குற்றம்சாட்டி இந்தப் பொய்ப் புகாரைப் பதிவு செய்துள்ளனர்” என்று புகாரில் கூறியுள்ளார்.
ஜூனியர் விகடன் அவதூறு வழக்கில் முதற்கட்டப் பதில் அனுப்பியதாக தெரிவித்துள்ள ஜூ.வி ஆசிரியர் கலைச்செல்வன், “ஜூனியர் விகடன் நிறுவனத்தில் கெவின் என்ற பெயரில் யாரும் ஆசிரியர் குழுவில் இல்லை அல்லது பத்திரிகை நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் நிர்வாக இயக்குநர்களுடன் தொடர்புடையவர்கள் யாரும் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, “விகடன் மற்றும் அதன் தொடர்புடைய நபர்கள்” என்று பெயர் குறிப்பிடப்பட்ட எஃப்.ஐ.ஆர்-க்கு கண்டனம் தெரிவித்தார். இது இந்த நிறுவனத்தில் யாரையும் கைது செய்யும் அதிகாரத்தை காவல்துறைக்கு அளிக்கிறது என்றும், திமுகவுக்கு எதிரான செய்திகளை வெளியிடும் ஊடகங்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாகவே பார்க்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இதனிடையே, சவுக்கு சங்கர், ஜி ஸ்கொயர் பற்றி பேசுபவர்களின் வாயை அடைக்கும் நோக்கத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“