தொடர் ஹிட்டுகள், மீள்கிறதா தமிழ் சினிமா?

கொரானோ தொற்றால் தமிழ் சினிமா கடந்த இரண்டு வருடங்களாகத் தடுமாறிக் கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாக பெரிய படங்கள் மட்டுமே வெற்றி பெற்று வருகிறது. சிறிய பட்ஜெட் படங்களுக்கும் இரண்டாம், மூன்றாம் கட்ட நடிகர்களின் படங்களுக்கும் பெரிய அளவில் வசூல் இல்லாமல் இருந்தது.

இந்த 2022ம் வருடத்தின் துவக்கத்திலும் கொரானோ மூன்றாவது அலையின் பாதிப்பு இருந்தது. ஆனால், சீக்கிரமே அந்த அலை மறைந்து போனதால் மக்கள் தியேட்டர்கள் பக்கம் வர ஆரம்பித்தனர்.

கடந்த ஐந்து மாதங்களில் வெளியான படங்களில் பிப்ரவரி மாதம் முதல் சில குறிப்பிடத்தக்க வெற்றிகள் வர ஆரம்பித்தது. 'வலிமை, எதற்கும் துணிந்தவன், பீஸ்ட்' ஆகிய முன்னணி நடிகர்களின் படங்கள் வசூல் ரீதியாக வெற்றியடைந்தாலும் அடுத்த கட்ட நடிகர்களின் படங்களான “எப்ஐஆர், மன்மத லீலை, செல்பி, காத்து வாக்குல ரெண்டு காதல், டான்' ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளன. இவற்றையெல்லாம் மீறி டப்பிங் படங்களான 'ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2' படங்கள் நேரடி தமிழ்ப் படங்களைக் காட்டிலும் நல்ல லாபத்தைக் கொடுத்துள்ளன.

தியேட்டர்களில் இடைவெளி இல்லாமல் அடுத்தடுத்து படங்கள் திரையிடப்பட்ட ஆரோக்கியமான ஒரு சூழல் உருவாகியுள்ளது. இந்த வருடம் கோடை விடுமுறை என்பது நீண்ட நாட்கள் இல்லாமல் போய்விட்டது. 12ம் வகுப்பு, 11ம் வகுப்பு, 10ம் வகுப்புகளுக்கு இப்போதுதான் அடுத்தடுத்து தேர்வுகள் முடிவடைய உள்ளன. இதனால், குடும்பத்தினர் இந்த கோடை விடுமுறைக்கு தியேட்டர்களுக்கு அதிகம் வர முடியாமல் போய்விட்டது.

ஜுன் இரண்டாவது வாரத்தில்தான் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் ஜுன் முதல் மற்றும் இரண்டாவது வாரத்தில் வெளியாகும் படங்களுக்கு நல்ல வசூல் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஜுன் 3ல் வெளியாகும் கமல்ஹாசனின் 'விக்ரம்' படம் அந்த வசூல் மகசூலை அள்ளிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆறேழு மாதங்களில் நிறைய படங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.