இந்திய பங்குச்சந்தைகள் 30% வரை சரியக் கூடும்: மார்க் மொபியஸ்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: உக்ரைன் மீது ரஷ்யா போர் துவங்கிய பிப்ரவரியிலிருந்து உலக பங்குச்சந்தைகள் ஊசலாட்டத்தில் இருக்கின்றன. இந்நிலையில் 30 ஆண்டுகாலமாக உலக பங்குச்சந்தைகளில் முதலீடுகளை மேற்கொண்டு வரும் மார்க் மொபியஸ் இந்திய பங்குச்சந்தைகள் அதன் உச்சத்திலிருந்து 30 சதவீதம் வரைக் கூட விழக்கூடும் என்றார்.

பணவீக்க பிரச்னை இருந்த சூழலில் ரஷ்யா – உக்ரைன் போர் பொருளாதாரத்தை கடினமான காலக்கட்டத்துக்குள் கொண்டு சென்றது. இதனால் உச்சத்திலிருந்த பங்குச்சந்தைகள் தொடர் வீழ்ச்சியையும், கடுமையான ஏற்ற இறக்கங்களையும் சந்தித்து வருகின்றன. தற்போது, நிப்டி அதன் உச்சநிலையில் இருந்து 12 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த வெள்ளியன்று பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டதால் இந்த நிலை. இல்லையெனில் 15 சதவீத சரிவில் இருந்திருக்கும். ஐ.டி., வங்கி, உலோகப் பங்குகள், மருந்து நிறுவனப் பங்குகள், ரியல் எஸ்டேட் துறைப் பங்குகள் அனைத்தும் வீழ்ச்சியில் உள்ளன.

latest tamil news

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பிரபல பங்குச்சந்தை நிபுணர் மார்க் மொபியஸ் கூறியதாவது: பங்குச்சந்தைகள் மேலும் வீழ்ச்சி காணக்கூடும். இந்திய குறியீடுகள் அதன் உச்சத்திலிருந்து 30 சதவீதம் வரை சரியக்கூடும். ஆனாலும் ஒரு நம்பிக்கை கீற்று உள்ளது. இந்திய சந்தை உலக சந்தைகளை விட சிறப்பாக செயல்படும். குறைந்த கடன் மற்றும் வலுவான விலை நிர்ணயம் செய்யும் இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டும். இவ்வாறு மொபியஸ் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.