28ந்தேதி திறப்பு விழா: சென்னை வந்தடைந்தது கருணாநிதி சிலை…

சென்னை:  ஓமந்தூரார் வளாகத்தில் வரும் 28ந்தேதி கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெற உள்ள நிலையில், அதற்கான கருணாநிதி சிலை சென்னை வந்தடைந்தது. மே 28-ல் கருணாநிதி சிலையை குடியரசுத் துணைத் தலைவர்  வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார்

ஜூன் 3ந்தேதி முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்தநாள் விழா தமிழகஅரசால், அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இதற்கான அறிவிப்பை தமிழக சட்டப்பேரவையில்110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “திருவாரூரில் முத்துவேலர் – அஞ்சுகம் அம்மையாருக்கு மகனாக கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3-ம் நாள், அரசு விழாவாக இனி கொண்டாடப்படும் என்றும்,  ஜூன் 3அன்று சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கம்பீரக் கலைஞரின் கலைமிகு சிலை நிறுவப்படும் என்பதையும் அறிவிப்பதில் பெருமைப்படுகிறேன்” என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

இதையடுத்து, சென்னையில் உள்ள ஒமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் ரூ.1.56 கோடி செலவில்  சிலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டு உள்ள நிலையில், அதில் இடம்பெற இருக்கும் கருணாநிதி சிலை,  சென்னை வந்தடைந்தது. இந்த சிலையை பீடத்தின் மீது அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதைத்தொடர்ந்து, வரும் 28-ம் தேதி குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு  கருணாநிதி சிலையைத் திறந்து வைக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.