ஒவ்வொரு நொடிக்கும் ஆயிரம் டாலர் லாபம்; Covid கோடீஸ்வரர்களை உருவாக்கியதா? OXFAM அறிக்கை சொல்வதென்ன?

அடுத்தவர்களின் வலியில் லாபம் பார்ப்பது இரக்கமற்ற மனநிலை. ஆனால், உலகில் பல பெருநிறுவனங்கள் அப்படித்தான் லாபம் பார்த்தன என்று அடித்துச் சொல்கிறது ஆக்ஸ்ஃபேம் அறிக்கை.

கொரோனாவால் பாதிப்புக்கு ஆளாகாதவர்களே இல்லை என்று நினைக்கிறோம். வேலை பறிபோனது, வருமான இழப்பு, ஊரடங்கு ஏற்படுத்திய பொருளாதார முடக்கம் ஆகியவை காரணமாக அடுத்த வேளை உணவுக்கே வழியில்லாமல் எளிய குடும்பங்கள் தவித்தன. பொருளாதாரம் முடங்கியதால் பணக்காரர்களும் பாதிக்கப்பட்டார்கள் என்றே நினைத்தோம். ஆனால், 23 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொரோனா தாக்கிய இரண்டாண்டுகளில் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.

World Economic Forum

ஸ்விட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் World Economic Forum நிகழ்வில் இந்த வித்தியாசத்தை OXFAM அமைப்பு சமர்ப்பித்துள்ள அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. ‘வலியில் லாபம் பார்ப்பது’ (Profiting From Pain) என்று பெயரிடப்பட்ட இந்த அறிக்கை நமக்கு அதிர்ச்சியளிக்கக் கூடியது. கொரோனா தொற்று ஆரம்பித்த வருடத்தில் ஒவ்வொரு 30 மணி நேரத்திற்கும் ஒரு பில்லியனர் உருவாகி இருக்கிறார். ஒவ்வொரு 33 மணி நேரத்திற்கும் பத்து லட்சம் மக்கள் அதீத வறுமைக்குள் தள்ளப்பட்டிருக்கின்றனர்’ எனச் சொல்கிறது OXFAM. அந்த அறிக்கை சொல்வது என்ன?

வறுமை என்ற பள்ளத்திலிருந்து பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு மேலேறி வந்த பல குடும்பங்களைப் பாழுங்கிணற்றில் தள்ளியிருக்கிறது கொரோனா. பெருந்தொற்று, பணவீக்கம், பொருளாதார மந்தநிலை என எது வந்தாலும் ஏழைகள் இன்னும் ஏழைகளாவதும், பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவதுமான சமநிலையற்ற சூழல் தொடர்கிறது. இதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்கிறது ஆக்ஸ்ஃபேம்.

OXFAM அமைப்பு:

Oxford Committee for Famine Relief என்பதன் சுருக்கம் தான் OXFAM. இரண்டாம் உலகப் போரின்போது கிரீஸ் நாட்டில், பசியால் வாடிய பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கப்பல்களில் உணவு அனுப்ப உருவாக்கப்பட்ட அமைப்பு இது. அதே பெயரில் 1995-ல் அரசு சாரா அமைப்புகள் ஒன்றிணைந்து Oxford International Federation என்ற அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. வளர்ந்துவரும் நாடுகளில் வறுமையாலும் அநீதியாலும் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவுவதே இந்த அமைப்பின் வேலை. டாவோஸ் நகரில் நடைபெறும் World Economic Forum அமைப்பின் வருடாந்திரக் கூட்டத்தில் OXFAM அறிக்கை சமர்ப்பிக்கப்படுவது வழக்கம். உலகின் பொருளாதார ஏற்றத்தாழ்வு குறித்து அந்த அறிக்கை எப்போதும் கவலைப்படும். கொரோனா காலத்தில் அந்தக் கவலை அதிகரித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி (மாதிரி படம்)

OXFAM அறிக்கை சொல்வதென்ன?

* கொரோனா பாதித்த முதல் ஒரு வருடத்தில் மட்டும் 573 புதிய பில்லியனர்கள் உருவாகி இருக்கிறார்கள். அதே சமயத்தில் 2.63 கோடி பேர் அதீத வறுமைக்குள் தள்ளப்பட்டனர்.

* உலகம் முழுவதிலும் உணவுப் பொருட்கள், மருந்து மற்றும் எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இந்தத் துறைகளில் இருப்பவர்கள் இதனால் அதிக லாபம் பார்த்தனர்.

* இப்போது உலகில் 2,668 பில்லினியர்கள் இருக்கின்றனர். இவர்களில் 573 பேர் கொரோனா காலத்தில் உருவானவர்கள். இவர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 12.7 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள். இதில் கிட்டத்தட்ட 42 சதவிகிதம் இந்த கோவிட் காலத்தில் அதிகரித்தது.

எலான் மஸ்க்

* உலகின் டாப் 10 பணக்காரர்களின் சொத்து மதிப்பு, உலகம் முழுக்க அடித்தட்டில் இருக்கும் 300 கோடி ஏழை மக்களின் சொத்து மதிப்பை விட அதிகம்.

* எலான் மஸ்க் உலகின் முதல் பணக்காரர். அவரின் சொத்து மதிப்பு கொரோனா காலத்தில் 699% அதிகரித்திருக்கிறது. அவர் தன்னுடைய 99% சொத்துகளை இழந்து விட்டால் கூட 0.0001 சதவிகித உலகப் பணக்காரர்களில் ஒருவராக இருப்பார்.

பில்லியனர்கள் எங்கிருந்து உருவாகிறார்கள்?

* உணவு, மருந்து, எரிபொருள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் தான் இன்றைக்கு அதிகமாக லாபம் சம்பாதிப்பவை.

* உணவுப் பொருட்களின் விலை கடந்த ஆண்டு மட்டும் முந்தைய ஆண்டை விட 33.6 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. 2022-ல் 23% அதிகரித்து இருக்கிறது. 1990களில் இருந்து விலையேற்றப் பட்டியலை எடுத்துப் பார்த்தால் இந்த ஆண்டுகளில்தான் விலையேற்றம் அதிகம். ஏழை நாடுகளில் வாழும் மக்கள், வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாக உணவுக்காக செலவழிக்க வேண்டியுள்ளது.

* கார்கில், வால்மார்ட் போன்ற முன்னணி உணவுப் பொருள்கள் தயாரிப்பு நிறுவனங்கள் வரலாறு காணாத லாபம் பார்த்திருக்கின்றன.

வால்மார்ட்

* கொரோனாச் சூழலில் மருந்துத் துறையில் 40 பில்லியனர்கள் புதிதாக உருவாகியுள்ளனர். பார்மா நிறுவனங்கள் கோவிட் தடுப்பூசி என்கிற ஒரேயொரு பொருளின் உற்பத்தியில் எடுத்த லாபம் ஏராளம்.

*கொரோனா தடுப்பூசியை வைத்து Moderna மற்றும் Pfizer நிறுவனங்கள் ஒவ்வொரு நொடிக்கும் ஆயிரம் டாலர் லாபம் சம்பாதிக்கின்றன. ஆனால், இந்த நிறுவனங்கள் விற்கும் தடுப்பூசியை உருவாக்க அரசுகள் பல கோடிகளை அள்ளிக் கொடுத்தன. ஆனால், அரசுகளுக்கே அவை அதிக லாபத்துக்குத்தான் தடுப்பூசியை விற்கின்றன.

OXFAM அறிக்கையிலிருநது…

மூன்று சீர்திருத்தங்கள்:

சரி, இந்த ஏற்றத்தாழ்வை சரி செய்ய என்ன வழி? மூன்று வழிகளை OXFAM முன்வைக்கிறது.

* பெரும் பணக்காரர்கள் ஒரு சூழலால் திடீரென அதிக லாபம் சம்பாதிக்கும்போது, அவர்களுக்கு திடீர் வரி (Windfall Tax) விதிக்க வேண்டும். அவர்கள் பெறும் அதிக லாபத்தில் குறிப்பிட்ட சதவிகிதம் தற்காலிமாக வரியாக பெறப்பட வேண்டும்.

* கூடுதல் சொத்து சேர்த்த நிறுவனங்களுக்கு சொத்து வரி விதிக்க வேண்டும்.

* பெரும் பணக்காரர்கள் மீது நிரந்தர சொத்து வரி விதிக்க வேண்டும்.

“அரசாங்கங்கள் பில்லியனர்களின் விருப்பத்திற்கேற்பவே உலக பொருளாதாரத்தை அமைக்கின்றன, ஏற்றத்தாழ்வு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து இருக்கிறது. அடிப்படைத் தேவைகளுக்கே தடுமாறும் எளிய மக்களை துயரத்திலிருந்து மீட்க வேண்டும். அதற்கு மக்களின் குரலை அரசு கேட்க வேண்டும்” என OXFAM அறிக்கை வலியுறுத்துகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.