சக நடிகர்களை தவிர்க்கிறாரா கமல்ஹாசன், 'விக்ரம்' சர்ச்சை

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடிக்கும் படம் 'விக்ரம்'. இப்படத்தை பான்-இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிட உள்ளார்கள்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பை கமல்ஹாசன் நேற்று சென்னையிலிருந்து ஆரம்பித்தார். தொடர்ந்து டில்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூரு, கொச்சி ஆகிய ஊர்களிலும் நடத்த உள்ளார். நேற்று சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மட்டுமே கலந்து கொண்டார்கள்.

படத்தில் நடித்த விஜய் சேதுபதி, பகத் பாசில், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட யாரும் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் பல்வேறு வேலைகளில் இருப்பதால் வர முடியவில்லை என ஒரு காரணம் சொன்னார்கள். 'விக்ரம்' படம் ஒரு பான்–இந்தியா படம் என்கிறார்கள். இதற்கு முன் வெளிவந்த பான்–இந்தியா படங்களான 'ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2' ஆகிய படங்களை மொத்த குழுவினருடன் சென்று தான் அவர்கள் நிகழ்ச்சிகளை நடத்தினார்கள்.

ஆனால், கமல்ஹாசன் அவரை மட்டுமே முன்னிலைப்படுத்தும் விதமாக இப்படி செய்வது சரியா என நேற்றைய சென்னை பத்திரிகையாளர் சந்திப்பிலேயே ஒரு சலசலப்பு எழுந்தது. இன்று டில்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கமல்ஹாசன் மட்டுமே கலந்து கொண்டார். அடுத்த நடக்கும் நிகழ்வுகளிலாவது ஒரு பான்–இந்தியா படம் போல மொத்த குழுவினரையும் கலந்து கொள்ள வைப்பாரா கமல்ஹாசன் என கோலிவுட்டில் கேள்வி எழுப்புகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.