போலீஸ் தேர்வு முறைகேடு வழக்கில் கைதான ருத்ரேகவுடாவை மீண்டும் காவலில் எடுத்து விசாரணை

பெங்களூரு

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கில் மூளையாக செயல்பட்ட ருத்ரேகவுடாவை மீண்டும் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.

முறைகேடு

கர்நாடகத்தில் 545 சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்காக தேர்வில் நடந்த முறைகேடு குறித்து சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த முறைகேட்டில் மூளையாக செயல்பட்ட கலபுரகியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரான ருத்ரேகவுடா பட்டீலை கடந்த மாதம் (ஏப்ரல்) 24-ந் தேதி சி.ஐ.டி. போலீசார் கைது செய்திருந்தார்கள். அவரை காவலில் எடுத்து விசாரித்துவிட்டு, கலபுரகி சிறையில் போலீசார் அடைத்திருந்தனர்.

இந்த நிலையில், சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு குறித்து ருத்ரேகவுடாவிடம் மீண்டும் விசாரிக்க அனுமதி கோரி கலபுரகி கோர்ட்டில் சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது ருத்ரேகவுடாவை 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது. இதையடுத்து, ருத்ரேகவுடாவிடம் கலபுரகி சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்து விசாரணைநடந்து வருகிறது.

ரூ.2 கோடி சிக்கியது

இதற்கிடையில், சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் ஆள்சேர்ப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டான சாந்தகுமாரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவருக்கு கீழ் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 6 பேரையும் ஏற்கனவே போலீசார் கைது செய்திருந்தார்கள். இவர்களில் ஸ்ரீதர் வீட்டில் தான் ரூ.2 கோடி சிக்கி இருந்தது. இந்த நிலையில், துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தகுமாரை 3 நாட்கள் சி.ஐ.டி. போலீசார் தங்களது காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு 1-வது கூடுதல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நேற்று உத்தரவிட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.