ராம்கோபால் வர்மா மீது பணமோசடி புகார்

எப்போதும் பரபரப்பு கிளப்பி வருகிறவர் இயக்குனர் ராம்கோபால் வர்மா. சமீபகாலமாக வில்லங்கமான படங்களை இயக்கி அதன் மூலம் கடும் விமர்சனத்தையும், வசூலையும் பெற்று வருகிறார். கடைசியாக அவர் இயக்கிய டேன்ஞ்சர் என்கிற படம் லெஸ்பியன் உறவை அப்பட்டமாக சித்தரிக்கும் படமாக இருந்தது. எதிர்ப்புகள் காரணமாக படம் இன்னும் வெளிவரவில்லை.

இந்த நிலையில் ராம்கோபால் வர்மா மீது பணமோசடி புகார் கூறப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஐதராபாத்தில் நான்கு பேர் கொண்ட கும்பலால் இளம் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவத்தை மையமாக வைத்து 'திஷா என்கவுன்டர்' என்ற படத்தை தயாரித்து இயக்கினார்.

இந்தப் படத்துக்காக, ஹைதராபாத் அருகிலுள்ள குகட்பள்ளியைச் சேர்ந்த கே.சேகர் பாபு என்பவரிடம் 56 லட்சம் ரூபாய் கடனாகப் பெற்றுள்ளார் ராம் கோபால் வர்மா. இந்த பணத்தை படம் வெளிவரும்போது தந்து விடுவதாக சொன்ன ராம்கோபால் வர்மா சொன்னபடி திருப்பித் தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இதையடுத்து மியாபூர் போலீசில் ராம் கோபால் வர்மா மீது சேகர் பாபு பணமோசடி புகார் கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து ராம்கோபால் வர்மா மீது போலீசார் பணமோசடி வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.