லக்னோவை வீழ்த்தி 2-வது தகுதி சுற்றுக்குள் நுழைந்தது பெங்களூரு அணி

கொல்கத்தா,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் அறிமுக அணியான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் தோல்வி பெறும் அணி வெளியேறும் என்பதால் லக்னோ, பெங்களூரு ஆகிய இரு அணிகளும் இன்றைய போட்டியில் வெற்றி பெற கடும் முனைப்புடன் களமிறங்கின. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.

தொடக்க வீரர்களாக டு பிளெசிஸ் – கோலி களமிறங்கினர். மொஹ்சின் கான் வீசிய பந்தில் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார் டு பிளெசிஸ். அவரை தொடர்ந்து ரஜத் படிதார் களமிறங்கினார். நிதானமாக விளையாடி வந்த கோலி 24 பந்துகளில் 25 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

ரஜத் படிதார் அரைசதம் கடந்து அசத்த மேக்ஸ்வெல் 9 ரன்களில் நடையைக்கட்டினார். அவரை தொடர்ந்து லோம்ரார் 14 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பிறகு ரஜத் படிதார் உடன் ஜோடி சேர்ந்தார் தினேஷ் கார்த்திக்.

இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக ரவி பிஷ்னாய் வீசிய 16-வது ஓவரில் ரஜத் படிதார் 26 ரன்கள் குவித்தார். தொடர்ந்து அதிரடிக்காட்டிய படிதார் 49 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். லக்னோ அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த படித்தார் – கார்த்திக் ஜோடியை பிரிக்க முடியாமல் பந்துவீச்சாளர்கள் திணறினர்.

கடைசி 5 ஓவர்களில் பெங்களூரு அணி 80 ரன்களுக்கு மேல் குவித்தது. இறுதியில் 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 4 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. படித்தார் 54 பந்துகளில் 112 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது.

ஆனால் அந்த அணிக்கு ஆரம்பத்திலே அதிர்ச்சி காத்து இருந்தது. 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் குயின்டன் டி காக், சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து மனன் வோரா 19 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

பின்னர் கேப்டன் ராகுல் – தீபக் ஹூடா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கேப்டன் ராகுல் அரைசதம் கடந்து அசத்தினார். மற்றொரு முனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கபட்ட நிலையில் தீபக் ஹூடா 26 பந்துகளில் 45 ரன்களில் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் மார்கஸ் ஸ்டோனிஸ் களமிறங்கினார். ஹர்ஷல் பட்டேல் வீசிய 18-வது ஓவரில் மார்கஸ் ஸ்டோனிஸ் 9 ரன்களில் அவுட்டானார். கடைசி இரண்டு ஓவரில் வெற்றிக்கு 33 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் லீவிஸ் மற்றும் ராகுல் களத்தில் இருந்தனர்.

19-வது ஓவரை வீசிய ஹேசில்வுட் 4-வது பந்தில் ராகுலை வெளியேறினார். சிறப்பான பங்களிப்பை அளித்த ராகுல் 58 பந்துகளில் 79 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து குருனால் பாண்டியா டக் அவுட்டாகி வெளியேறினார்.

இறுதி ஓவரில் வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரில் லக்னோ அணியால் 9 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்தது. இறுதியில் பெங்களூரு அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-வது தகுதி சுற்றுக்குள் நுழைந்தது.

ஆமதாபாத்தில் 27-ந் தேதி நடக்கும் 2-வது தகுதி சுற்றில் ராஜஸ்தான் அணியுடன் பெங்களூரு அணி மோதும். இதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.