வீட்டுக்கு போய் சமையல் செய்… பாஜ தலைவர் சர்ச்சை பேச்சு

மும்பை: இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு வழங்கக்கோரி மும்பையில் நேற்று முன்தினம் பாஜ சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்று பேசிய பாஜ மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், `சுலே அவர்களே… இன்னும் ஏன் நீங்கள் அரசியலில் இருக்கிறீர்கள்? வீட்டுக்கு சென்று சமையுங்கள். டெல்லி செல்லுங்கள் அல்லது மயானத்துக்கு செல்லுங்கள். எங்களுக்கு தேவை ஓபிசி இடஒதுக்கீடு’ என பேசினார். இந்த பேச்சு பெரும் சர்ச்சையாகி உயுள்ளது. இதற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெண்கள் அணி மாநில தலைவி வித்யா சவான் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் சந்திரகாந்த் பெயரை குறிப்பிடாமல் கூறுகையில், ‘எம்எல்ஏ.வாக இருந்த ஒரு பெண்ணுக்கு சீட் தராமல் அவரது தொகுதியில் போட்டியிட்டவர். உங்களுக்கு மனுஸ்மிருதி மீது நம்பிக்கை இருப்பதை நாங்கள் அறிவோம். ஆனாலும் நாங்கள் இனிமேலும் அமைதி காக்க மாட்டோம். அவர் வேண்டுமானால் சப்பாத்தி செய்ய கற்றுக் கொள்ளட்டும், அது அவரது மனைவிக்கு வீட்டில் உதவ தேவையாக இருக்கும்,’ என்று தெரிவித்தார். கோலாப்பூரை சேர்ந்த சந்திரகாந்த் பாட்டீல் கடந்த 2019ம் ஆண்டு புனேயின் கோத்ரூட் தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக, இங்கு பாஜ எம்எல்ஏவாக இருந்த மேத்தா குல்கர்னி சந்திரகாந்த் பாட்டீலுக்கு இடம் தரமறுத்து விட்டார். இதை குறிப்பிடும் வகையில்தான் அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.