ஐபிஎல் கிரிக்கெட்- பெங்களூருவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது ராஜஸ்தான்

அகமதாபாத்:
15-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 2-வது தகுதிச்சுற்று போட்டி அகமதாபாத்தில் இன்று நடைபெற்றது. இதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, டு பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இரு அணிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
அதன்படி, முதலில் பேட் செய்த பெங்களூரு அணியில் தொடக்க ஆட்டக்காரரான விராட் கோலி 7 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். கேப்டன் டூ பிளசிஸ் 25 ரன்னும், மேக்ஸ்வெல் 24 ரன்னிலும், லாம்ரோர் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.  
ஒருபுறம் விக்கெட் விக்கெட் வீழ்ந்தாலும் கடந்த போட்டியில் அதிரடியாக ஆடிய ரஜத் படிதார் பொறுப்புடன் ஆடி அரைசதம் கடந்து, 58 ரன்னில் வெளியேறினார். 
தினேஷ் கார்த்திக் 7 ரன்னில் அவுட்டானார். பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் சார்பில் மெக்காய், பிரசித் கிருஷ்ணா தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து 158 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணியில் துவக்க வீரர் ஜெய்ஸ்வால் 21 ரன் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். கேப்டன் சஞ்சு சாம்சன் 23 ரன்கள் அடித்தார். மற்றொரு தொடக்க வீரர்  ஜாஸ்பட்லர் 60 பந்துகளில் 10 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 106 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.  
18.1 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் குவித்தது. இதையடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அந்த அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.