ராஜஸ்தான் மாநிலம் பிவாடி நகரில் வசித்து வரும் அஜித்சிங் அங்குள்ள பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த சுமன் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
காதல் திருமணம் அஜித்சிங்குக்கு இனிமையானதாக அமையவில்லை. திருமணத்துக்கு பின்னர்தான் சுமன் எப்படிப்பட்டவர் என்பது தெரிய வந்தது. வீட்டில் ஏற்படும் சின்ன சின்ன பிரச்சினைகளுக்கெல்லாம் கோபப்பட்டு கையில் கிடைப்பதை தூக்கி கணவரை தாக்க தொடங்கினார் சுமன்.
ஆரம்பத்தில் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாத அஜித்சிங் போக போக சரியாகி விடும் என்று எண்ணினார். ஆனால் ஒவ்வொரு நாளும் மனைவி சுமனின் தாக்குதல்கள் வித விதமாக கோரத்தாண்டவம் ஆடத் தொடங்கியது.
ஒருநாள் பூரிக்கட்டை தாக்குதல் என்றால் மறுநாள் கரண்டி அடி. அதற்கு அடுத்த நாள் கிரிக்கெட் மட்டையால் தாக்குதல் என ஒவ்வொரு நாளும் சுமன் சிக்சர்களை பறக்க விட்டார். கணவரை அடிக்க தொடங்குவதற்கு முன்னதாக சுமன் வீட்டை உள்பக்கமாக பூட்டிக் கொள்வார். பின்னர் கணவர் அஜித்சிங்கை வீட்டுக்குள்ளேயே ஓட ஓட விரட்டி வெறித்தனமாக தாக்குதல் நடத்துவார். இப்படி ஒவ்வொரு நாளும் மனைவியின் தாக்குதலில் அஜித்சிங் பலத்த காயம் அடைவதும், ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெறுவதும் தொடர் கதையாகவே மாறி உள்ளது.
கணவரை அடிக்க கையில் ஏதும் கிடைக்காவிட்டால் சுமன் என்ன செய்வார் தெரியுமா? கணவரின் தலைமுடியை கொத்தாக பிடித்துக் கொள்வார். பின்னர் தலையை பலமாக சுவற்றில் மோத விட்டு தாக்குதலில் ஈடுபடுவார். இப்படி மனைவி ஸ்டண்ட் மாஸ்டராக மாறி தன்னை தினமும் அடித்து உதைத்து துவைத்து எடுத்த போதிலும் கணவர் அஜித்சிங்கோ எந்த சூழ்நிலையிலும் எதிர் தாக்குதலை நடத்தியது இல்லை.
திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகும் நிலையில் ஒவ்வொரு நாளும் மனைவியிடம் அடி வாங்கிய அஜித்சிங் இதுபற்றி போலீசிலும் புகார் அளித்துள்ளார். அப்படி புகார் செய்தால் போனசாக தாக்குதல்களை பல மடங்கு அதிகரிக்க செய்துள்ளார் சுமன்.
இப்படி அடிதாங்க முடியாமல் ஒவ்வொரு நாளையும் கழித்த அஜித்சிங் மனைவியின் தாக்குதல் காட்சிகளை பதிவு செய்து கோர்ட்டில் ஒப்படைக்க முடிவு செய்தார். இதன்படி வீட்டில் கேமராக்களை பொறுத்தி தான் அடி வாங்கும் காட்சிகளை பதிவு செய்தார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோர்ட்டில் இந்த வீடியோ காட்சிகளுடன் அஜித்சிங் மனு ஒன்றையும் தாக்கல் செய்தார். அதில், “மனைவியின் அடி தாங்க முடியவில்லை. உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்று முறையிட்டார்.
அஜித்சிங் அடி வாங்கும் வீடியோக்களை பார்த்த நீதிபதி, அஜித்சிங்கை பார்த்து இவ்வளவு அடி வாங்குகிறீர்களே, ஏன் திருப்பி அடிக்கவில்லை? என்று கேட்டுள்ளார்.
இதற்கு பரிதாபத்துடன் பதில் அளித்த அஜித்சிங் காதல் மனைவியை எனக்கு அடிக்க தோன்றவில்லை என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அஜித்சிங் மேலும் கூறும்போது,நான் ஒரு தலைமை ஆசிரியர். கண்ணியத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மனைவியின் அடி-உதை சித்ரவதைகளை பொறுத்துக் கொண்டேன்.
In a strange case of domestic violence, a school principal in #Alwar district of #Rajasthan has move the court seeking protection from the physical and mental harassment of his wife.
According to the man, his wife has been beating him black and blue leaving him weak mentally. pic.twitter.com/J1UOmRhyHw
— IANS (@ians_india) May 25, 2022
இதுநாள் வரை காதல் மனைவி என்னை எத்தனையோ முறை தாக்கி இருக்கிறார். ஆனால் அடிப்பதற்கு என்று எனது விரல் கூட அவள் மீது பட்டது இல்லை என்று தெரிவித்துள்ளார். அஜித்சிங்கின் நிலைமையை புரிந்து கொண்ட நீதிபதி அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
இனியாவது அஜித்சிங்குக்கு அடி விழாமல் இருக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்…இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை