கன்னட படத்தில் நடித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
கர்நாடகத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக 10 ஆண்டுகள் பணியாற்றியவர் அண்ணாமலை. இவர் கரூர் மாவட்டத்திலுள்ள சொக்கம்பட்டியில் பிறந்தவர். அரசியல் ஆர்வம் காரணமாக தனது ஐபிஎஸ் வேலையை ராஜினாமா செய்துவிட்டு தற்போது தமிழக பாஜகவில் இணைந்து மாநில தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் கன்னடத்தில் உருவாகியுள்ள அரபி என்ற படத்தில் அண்ணாமலை ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
இரண்டு கைகளும் இல்லாமல் சர்வதேசப் போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு சாதனைகளை செய்த நீச்சல் வீரர் விஸ்வாசின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து இந்தப் படம் தயாராகியுள்ளது. இதில் விஸ்வாசின் பயிற்சியாளராக அண்ணாமலை நடித்துள்ளார். முதலில் சினிமாவில் நடிப்பதற்கு தயங்கிய அண்ணாமலை இயக்குனர் சொன்ன கதை பிடித்து போனதால் நடித்திருக்கிறார். படத்தின் டீசர் மாலை வெளியாகிறது. இந்த படத்தில் நடித்ததற்கு பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாக வாங்கி நடித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.