* கௌதமியின் மகள் சுப்புலட்சுமியை சினிமாவிற்குள் கொண்டு வர முடிவு செய்துவிட்டார்கள். அதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வழக்கம் போல் அவருக்கு நடனப் பயிற்சி, பேச்சு மொழிக்கான பயிற்சிகள் எல்லாம் கொடுக்கப்பட்டு வருகின்றன. ஒரு இளம் ஹீரோ படத்தில் அவரை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதுதான் திட்டம். அதன்படி, துருவ்வின் அடுத்த படத்தில் அவரை நடிக்கவைக்க எண்ணியிருக்கிறார்கள். கௌதமியே நேரிலிருந்து தன் மகளின் என்ட்ரிக்கான முன்னெடுப்பைக் கவனித்து வருவதுதான் இதில் விஷயம். கமல் பிரிவுக்குப் பிறகு அவர் ஒதுங்கியிருந்ததற்குப் பிறகு இப்போதுதான் முழுவீச்சில் வெளியே புறப்படுகிறார்.
* ‘நானே வருவேன்’ படத்தை முடித்துவிட்டு முழுநேர நடிகனாகிவிடலாம் என்ற முடிவில் இருக்கிறார் செல்வராகவன். அவர் மனைவி முதற்கொண்டு வீட்டில் உள்ளவர்களும் இந்த முடிவையே வலியுறுத்துகிறார்கள். ‘இனி டைரக்ஷன் டென்ஷன் வேண்டாம்’ எனத் தம்பி தனுஷே சொல்லிவிட்ட பிறகு இந்த முடிவில் மாற்றம் இல்லை என்கிறார்கள். இப்போது நிறையக் கதைகளை மனைவியோடு சேர்ந்து கேட்கத் தயாராகிவிட்டார் செல்வா.
* அடுத்து ஒரு ஹீரோவின் மகன் சினிமாவிற்கு என்ட்ரி ஆகப்போகிறார். அவர் வேறு யாருமல்ல. நடிகர் சரத்குமார் – ராதிகாவின் மகன் ராகுல்தான். வெளிநாட்டில் படித்துவிட்டு வந்திருக்கிற அவரின் மேல் திரையுலகின் பார்வை கணிசமாக விழுந்துவிட்டது. ஆனால், இன்னும் நான்கைந்து வருடங்களுக்குப் பிறகு அவரை சினிமாவிற்கு அனுப்பலாம் என்று சரத் சொல்ல, ராதிகாவும் அதற்கு ஆமோதித்திருக்கிறார். ஆனால், அவர் உடன் இருக்கிறவர்கள் அடுத்த வருட ஆரம்பத்திலேயே மகனைக் களமிறக்கத் தூண்டி வருகிறார்கள். நிச்சயமாக ஒரு பெரிய இயக்குநரின் கையில்தான் அவரை ஒப்படைப்பார்கள் என்று தெரிகிறது. அது இயக்குநர் மணிரத்னமாகவும் இருக்கலாம் என்கிறார்கள்.
* விஜய் ரசிகர் மன்றத்தின் காப்பாளர் பொறுப்பிலிருக்கும் புஸ்ஸி ஆனந்த் – விஜய் நட்பை எப்படியாவது துண்டிக்கத் துடிக்கிறார் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர். அதற்காக விஜய்க்கு நெருக்கமான எல்லா இயக்குநர்களிடமும் நண்பர்களிடமும் ரகசியமாக இதற்கான முயற்சியை எடுக்கும்படி வேண்டி வருகிறாராம். நிறையப் பேர் இதை விஜய்யிடம் கொண்டுபோய் சேர்க்க அஞ்சுகிறார்கள். இருந்தாலும் இந்தப் போக்கைக் கைவிடாமல் இருக்கிறார் எஸ்.ஏ.சி. இறங்கி வரத் தயாராகி வருகிற விஜய்யிடமும் இதுவே மனவருத்தத்தைத் தூண்டியிருக்கிறது என்கிறார்கள்.
* குழந்தைகள் வளர்ந்துவிட்டதால் மீண்டும் சினிமாவிற்குள் தீவிரமாகக் களமிறங்கவிருக்கிறார் சினேகா. முக்கியமான கேரக்டர்களில் நடிக்கவும், சொந்தமாகப் படங்கள் தயாரிக்கவும் திட்டமிட்டு வருகிறார். அதற்குக் கணவர் பிரசன்னாவின் ஆதரவும் இருக்கிறதாம். நடுத்தரமான பட்ஜெட் படங்கள்தான் அவரின் சாய்ஸ் என்கிறார்கள். இதற்காகத் தீவிரமாகக் கதை கேட்கத் தொடங்கி விட்டார் சினேகா. அதனால் டிவி லைவ் ஷோக்களில் கலந்து கொள்வதை படிப்படியாகக் குறைத்துக் கொண்டும் வருகிறார்.
* வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடிக்கும் படம் ‘விடுதலை’. திண்டுக்கல் சிறுமலையின் மேலே மலைகளில் ஒரு பெரிய கிராமப்புற செட்டை அமைத்திருக்கின்றனர். அங்குதான் விஜய் சேதுபதி பங்கேற்கும் சண்டைக்காட்சிகளைப் படமாக்கி வருகின்றனர். கடந்த ஒன்றரை மாதமாகவே சிறுமலை மலைப்பகுதியில் படக்குழுவினர் தங்கியுள்ளனர். விஷப்பாம்புகள், காட்டெருமைகள், காட்டு நாய்கள் மற்றும் பூச்சிகளைக் கடந்து வனப்பகுதிக்குள் படமாக்கி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து சென்னை ஷெட்யூலோடு படப்பிடிப்பு முடிவடைகிறது என்கிறார்கள். விரைவில் ‘விடுதலை’ ரிலீஸ் தேதியை எதிர்பார்க்கலாம்.
* இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி, ‘விருமன்’ படத்தோடு சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிடுவார் என்று திரையுலகில் பேச்சு இருந்து வந்தது. இந்நிலையில் முதல் படத்திலேயே அவரது நடிப்பைப் பலரும் பாராட்டிவிட்டதில், பொண்ணு செம ஹேப்பி! அதனால் இனி தொடர்ந்து படங்களில் நடிக்க முடிவெடுத்திருக்கிறார். அவரின் திருமணத்தைப் பார்ப்பது குறித்து ஆசைப்பட்ட அப்பா ஷங்கரிடம், ”இன்னும் நாலு வருஷத்துக்குப் பிறகு பாத்துக்கலாம்ப்பா. அதுவரை சில படங்கள் நடிச்சிட்டு வர்றேன்” எனச் சொல்லியிருக்கிறார். இதற்கு ஷங்கரும் க்ரீன் சிக்னல் காட்டியதாகத் தகவல்.